நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போற்றி தோட்டத்திலிருந்து கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றுப்பகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வினால் நீர்மின் உற்பத்தி, கால்நடைவளர்ப்பு என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் அபாய நிலைமை உருவாகியுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மாணிக்ககல் அகழ்வினால் காசல் ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் கெசல்கமுவ ஓயாவில் பாரிய குழிகள் ஏற்பட்டு சூழல் பாதிப்படைந்து வருவதாக நோர்வூட் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட போற்றி தோட்டத்திலிருந்து கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றுப்பகுதியிலேயே அதிகளவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர் .
இரவு பகல் வேளைகளில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட குழுவினர் சட்ட விரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதுடன் கரையோரப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரிய குழிகள் ஏற்பட்டுள்ளதால் கால்நடைகளுக்கு புல் அறுக்க செல்வோர் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதேவேளை, கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வின் போது தோண்டப்படும் மண் மற்றும் இல்ல மண் கழுவப்பட்டு காசல் ரீ நீர்தேக்கத்திற்குள் வந்தடைவதால் நீர்தேக்கத்தில் சேற்று மண் நிறைந்து நோட்டன் விமலசுரேந்திர நீர் மின் நிலையத்தின் நீர்மின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இதனால் நோட்டன் விமலசுரேந்திர நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்காக சேமிக்கப்படும் நீரின் அளவினை குறைகின்றது.
மேலும் நன்நீர் மீன் வளர்ப்பு திட்டத்தினூடாக தமது நாளாந்த வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும்காசல் ரீ நன்நீர் மீன் வளர்ப்பாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இவ்வாறான சூழல் மாசடைவிலிருந்து சூழலை பாதுகாப்பதற்கும், கால்நடை வளர்ப்பாளர்களின் பாதுகாப்பு கருதியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
