தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்! ஆட்சி காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு?

” சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அரசின் பதவி காலத்தை நீடித்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கக்கூடாது. அந்த முயற்சி ஒருபோதும் கைகூடாது.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

” கொரோனா பெருந்தொற்றால் உங்களுக்கு இரண்டு வருடங்கள் இல்லாமல்போய்விட்டன. சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி ஏன் அந்த காலத்தை பெறக்கூடாது என கண்டியில் வைத்து இளைஞர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கருத்து கருத்து வெளியிட்டிருந்தார் .

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தறை மாவட்டக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியவை வருமாறு,

” எந்தவொரு தலைவருக்கு தனித்து அரசை நிர்வகிக்க முடியாது. அதேபோல நாட்டை முன்னோக்கி அழைத்துச்செல்லவும் முடியாது. சிறந்த குழுவொன்று இருந்தால்தான் அது சாத்தியப்படும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மொட்டுக் கட்சியினர் தேடி வந்தனர். மொட்டு கட்சியின் முதல்நிலை தலைவர்கள்கூட தனித்தனியே வந்து என்னை சந்தித்தனர். இதன்பிரகாரம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டோம். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற முதல்வாரமே கூட்டணி ஒப்பந்தத்தை மீறிச்செயற்பட்டனர். கடையிசியில் கறிவேப்பிலையின் நிலைதான் எமக்கு. நன்றாக பயன்படுத்திக்கொண்டனர்.

தூய்மையான ஆட்சியை முன்னெடுக்க தனிமனிதமான போராடினேன். அப்போதுகூட நாட்டை இவ்வாறானதொரு நிலைக்கு நான் தள்ளிவிடவில்லை. நல்லாட்சியின்போது பொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டன. எரிபொருள்விலைகூட ஓரிரு ரூபாவால்தான் அதிகரிக்கப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துகூட மொட்டு கட்சித் தலைவர்கள் சைக்கிளில் பவனி வந்தனர். பொருட்களை காண்பித்து இப்போது சந்தோஷமா என கேட்டனர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது?

இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படலாம். அதன்பிறகு நிச்சயம் தேசியமட்டத் தேர்தல் என்றால் அது நாடாளுமன்றத் தேர்தலாகவே அமையும். சிலர் சர்வஜன வாக்கெடுப்பு பற்றி அங்கும், இங்கும் கதைக்கின்றனர். நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை நீடித்துக்கொள்வதற்கு ஜேஆர் ஜயவர்தனவும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார். எனவே, சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, அரசின் பதவி காலத்தை நீடிப்பதற்கு முற்படவேண்டாம். அது ஒருபோதும் நடக்காது.” – என்றார்.

Related Articles

Latest Articles