எத்தகைய குற்றங்களை புரிந்தோராயினும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் சிறைக் கைதிகளை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகுமென நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தற்போது 26 ஆயிரம் சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களில் 8000 பேர், குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் பெற்றுக் கொடுக்கப்படும் வசதிகளுக்கு மேலதிகமாக சிறைக்கைதிகளுக்கு, தேவையான நலன்புரி வசதிகளை வழங்குவதற்கு விசேட குழுக்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், 1934ம் ஆண்டுக்குப் பின்னர், முதல் தடவையாக மனிதாபிமான நோக்கில் சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மரண தண்டனை பெற்று, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளுக்குள்ளேயே இதற்கான இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறு குற்றங்கள் புரிந்துள்ள நபர்களை வீடுகளிலேயே தடுப்புக்காவலில் வைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டமொன்றை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.










