மலையக மக்கள் முன்னணி என்ற அமைப்பின் தூண்களாகிய மக்கள், சந்திரசேகரன் மக்கள் முன்னணியினுடனேயே இருக்கிறார்கள். எனவே, இனிவரும் காலங்களில் மக்களை பற்றி சிந்திக்கும் , மக்களுக்காக சேவை செய்யும் அமைப்பாக சந்திரசேகரன் மக்கள் முன்னணியே இயங்கும் என சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
மேலும் ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தப்பட்ட எம் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு அரசியல் சமூக மாற்றங்களை எதிர்ப்பார்த்து 1990ம் ஆண்டுகளில் அமரர் சந்திரசேகரனுடன் இணைந்து மலையக மக்கள் முன்னணியை உருவாக்கியது இன்றைய தலைமையில் இருக்கும் வியாபாரிகளின் வங்கிக்கணக்குகளையும் சொத்துக்களையும் அதிகரித்துக்கொள்வதற்கு அல்ல. மக்களின் நலனை முன்னிருத்தியே அன்றைய முன்னணி செயற்பட்டது.
ஆனால் மலையக மக்கள் முன்னணியின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உள்ளார்ந்த பழிவாங்கல்கள் பதவி பேராசைகள் இப்படியே போனால் கடைசியில் கட்சியில் எவருமே எஞ்சமாட்டார்கள் போலும்.
ஆகவே எம் மலையகத்துக்கு சேவை செய்ய எண்ணும் அனைத்து இளைஞர் ,யுவதிகள், புத்திஜீவிகள், ஆரம்பகால உறுப்பினர்கள் என அனைவருக்கும் இணைந்து செயற்பட சந்திரசேகரன் மக்கள் முன்னணி வாய்ப்பளிக்கும் .” எனவும் அனுசா தெரிவித்தார்.
