யாழில் 10 சபைகளை கூட்டணியாக கைப்பற்றுவோம்: கஜேந்திரகுமார் நம்பிக்கை

வடக்கில் கூட்டணியாக யாழில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்கமுடியும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அத்துடன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டிணைந்து ஆட்சியமைப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக வெளியான தகவல்களை அவர் மறுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று விசேட ஊடக சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது கூட்டணியாக இணைந்து வட, கிழக்கு மாகாணங்களில் எத்தனை உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கமுடியும் என எதிர்பார்க்கிறீர்கள் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலுள்ள 17 உள்ளுராட்சி மன்றங்களில் 10 சபைகளில் தம்மால் ஆட்சியமைக்கமுடியும் எனவும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் அநேகமாக 4 சபைகளில் ஆட்சியமைக்கமுடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேபோன்று தமிழரசுக்கட்சி முன்னிலை வகிக்கும் சபைகளில் அவர்கள் ஆட்சியமைப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆகவே இவ்விடயத்தில் தமிழரசுக்கட்சி சிந்தித்து செயற்படவேண்டும் எனவும் கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles