இந்தியாவிலிருந்து கொள்வனவுக்காக கோரப்பட்ட 3.1 மில்லியன் லீற்றர் நனோ நைதரசன் திரவ உர தொகுதியில் முதல் தொகுதியான ஒரு இலட்சம் லீற்றர் இன்று (20) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
ஸ்ரீ லங்கன் விமான சேவை சரக்கு விமானம் மூலம் இந்தியாவின் ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து இலங்கையை வந்தடைந்துள்ளது.

இதன் போது, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.
இவை அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பெரும் போக நெற் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் விவசாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (20) அதிகாலை 12.25 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான பாரிய சரக்கு விமானம் ஒன்றில் மேற்படி திரவ உரம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததோடு, அவை கொழும்பு கொமர்ஷல் உர நிறுவன மத்திய களஞ்சியத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவிலிருந்து மேலும் 5 இலட்சம் லீற்றர் நனோ நைதரசன் திரவ உர தொகுதி இவ்வாரம் இலங்கையை வந்தடையவுள்ளதாக பேராசிரியர் உதித ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.










