கம்பளை, குறுந்துவத்த பகுதியில் பாடசாலை மாணவனுக்கு நடந்துள்ள கொடூரம்…!

“டினர்” திரவம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தம்மை ஆசிரியரிடம் காட்டிக்கொடுத்தார் என சந்தேகித்து சக மாணவனின் காலில் டினரை வீசிய சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்களிடம், கம்பளை குருந்துவத்த பொலிஸார் நேற்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ஐந்தாம் வகுப்பை சேர்ந்த மூன்று மாணவர்களே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட சிங்கள மொழி மூல ஆரம்ப பாடசாலையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
14 வயது மாணவர் ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவமானது கடந்த 13.02. 2025 அன்று இடம்பெற்றிருந்தாலும், ஒரு மாதம் கடந்து சனிக்கிழமை (15.03.2025) மாலையே தீவைத்த மாணவர்களை பொலிஸார் விசாரணைக்காக பொறுப்பில் எடுத்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று குறித்த வகுப்பின் ஆசிரியை விடுமுறையில் இருந்ததாக தெரியவருகிறது. இந் நிலையில் வகுப்பறையில் இருந்த டினர் திரவத்தை மூன்று மாணவர்கள் திருடி மலசல கூடம் அமைந்துள்ள பகுதியில் தீ மூட்டி விளையாடியதாகவும், அதில் ஒரு மாணவன் போத்தல் ஒன்றில் திரவத்தை ஊற்றி தனது பைக்குள் ஒளித்து வைத்து கொண்டுள்ளார்.

மேற்படி சம்பவம் விசாரணைக்கு வந்த சந்தர்ப்பத்தில் குறித்த மாணவர்களை அடையாளம் காட்டியமைக்கு பழிவாங்கும் விதமாக அதே வகுப்பைச் சேர்ந்த பத்து மற்றும் பதினொரு வயதுடைய மூன்று மாணவர்கள், வகுப்பறையில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த பெயிண்ட் கொள்கலனில் டினர் திரவத்தை ஊற்றி, தீ வைத்து, குறித்த மாணவன் மீது வீசி, பழிதீர்க்க முயன்றதில் கால்களில் தீப்பற்றியதையடுத்து குறித்த மாணவன் வேதனையில் அலறிக்கொண்டு பிரிதொரு வகுப்புக்குள் ஓடியதையடுத்து அங்கிருந்த ஆசிரியை பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார்.

இதன் போது பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் குறுந்துவத்தை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தினை பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்களும் இணைந்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளாது வகுப்பறையில் உள்ள புத்தர் சிலைக்கு வைக்கப்பட்ட விளக்கு தவறி கீழேயிருந்த டினர் திரவ டப்பாவிற்குள் வீழ்ந்து தீப்பிடித்ததாகவும், இதனால் மாணவன் மீது தீப்பற்றியதாகவும் ஆசிரியர்கள் கூறி உண்மையினை மூடி மறைத்துள்ளனர்.

மேலும் ஐந்து நாட்களாக மருத்துவமனையில் இருந்த குறித்த மாணவன் நடந்த உண்மையினை பொலிசாரிடம் வாக்குமூலமாக கூறியிருந்தாலும் , அதில் யாரும் உரிய கவனம் செலுத்தியிருக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார், குறுந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், மேலும் இந்த சம்பவத்தால் தனது குழந்தையின் கற்றல் நடவடிக்கைகள் ஒரு மாதமாக தடைபட்டுள்ளதோடு , ஆறாத மகனின் காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு அதிக செலவில் முச்சக்கர வண்டியில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும், இந்த சம்பவத்திற்கு சரியன நீதியை கோருவதாகவும் கூறுகிறார்.

சிறிய வயது மாணவர்கள் இருந்த இடத்தில் ஆபத்தான எரியக்கூடிய திரவங்கள் வைக்கப்பட்டிருப்பது குறித்தும், சம்பவத்தை மறைக்க முயற்சித்தது குறித்தும் விசாரிக்க நாம் பாடசாலையின் தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல தடவைகள் முயன்ற போதிலும், ஊடகவியாலாளர்கள் என்று அறிந்துகொண்டதும் தொலைபேசியை துண்டித்துவிட்டார்.

குருந்துவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் சரத் விஜேசிங்க,மேற்படி சம்பவம் தொடர்பில் கம்பளை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிகையிட்டுள்ளார். மேலும் சிறார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை பெறுவதற்காக காவல்துறை சட்டப் பிரிவுக்கு சம்பவத்தினை பரிந்துரைத்துள்ளார்.

கம்பளை நிருபர்

Related Articles

Latest Articles