” நானும், இரா. சம்பந்தனும் 1977 ஆம் ஆண்டுதான் நாடாளுமன்றத்துக்கு தெரிவானோம். நாம் இருவரும் நாடாளுமன்றத்தில் அங்கம் காலப்பகுதிக்குள்ளேயே தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை கண்டுவிட வேண்டும் என்பதே எம் இருவரினதும் பொது கனவாக இருந்தது. அந்த கனவு தொடர்பில் அன்று முதல் இன்றுவரை பேச்சு நடத்துகின்றோம். முயற்சிகளை முன்னெடுக்கின்றோம்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசியல் தீர்வுக்காக இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இம்முறை எப்படியாவது இதனை வெற்றியை நோக்கி நகர்த்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். இதற்கு உங்கள் அனைவரினதும் (எம்.பிக்களின்) ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய கொள்கை விளக்க உரையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண வேண்டியதன் அவசியத்துவத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி, காணி விடுவிப்பு குறித்தும் கருத்து வெளியிட்டார்.
