ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் உடனடி மாற்றம் ஏற்படாது எனவும், விரிவான கலந்துரையாடல்களின் பின்னரே புதிய தலைவர் நியமிக்கப்படுவார் எனவும் அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி இவ்வருடம் டிசம்பர்வரை தலைமைப்பதவியில் ரணில் விக்கிரமசிங்க நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டிலேயே கட்சி சம்மேளனம் கூட்டப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரியவருகின்றது. அதாவது 6 மாதங்களுக்கு பின்னரே தலைமைப்பதவியில் மாற்றம் வரக்கூடும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் நேற்று (14) முற்பகல் நடைபெற்றது.
இதன்போது கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக பொதுத்தேர்தலில் கட்சிக்கு படுதோல்வி ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டது.
இதனையடுத்து கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. அவ்வேளையில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு இளம் தலைவரொருவர் அவசியம் என்பதே மக்களின் நிலைப்பாடு என்ற கருத்து சிரேஷ்ட உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி தலைமைப்பதவியை எதிர்ப்பார்க்கும் அனைவருக்கும் அது தொடர்பில் கோரிக்கையை முன்வைப்பதற்கும், அவர்கள் தொடர்பில் மக்களின் அபிப்ராயங்களை அறிந்து, அவர்களில் சிலரை தெரிவுசெய்து, முதற்கட்டமாக கட்சியில் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.
அதனை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுக்கின்றனர் என்பது உட்பட மேலும் சில காரணிகளைக்கருத்திற்கொண்டு தேசிய மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் தலைவர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுவார் என செயற்குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.