புபுரஸ்ஸ, கந்தலாதோட்ட வீடன் பிரிவில் அமைந்துள்ள வீடொன்றில் இரகசியமாக இயங்கிவந்த (சீனி கறிஞ்ஞா) எனும் சட்டவிரோத கள்ளு தயாரிப்பு நிலையம் ஒன்றினை புபுரஸ்ஸ பொலிஸார் நேற்று (16) அதிகாலை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது 781 கள்ளு போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீண்டகாலமாக இயங்கிவந்ததாகக் கூறப்படும் மேற்படி சட்டவிரோத மதுபான நிலையத்தினை சுற்றிலும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு பிரதான பாதைகளில் உலவாளிகளை நிறுத்தியும் பொலிஸாரிடம் பிடிபடாமல் இதுவரையில் தப்பிவந்துள்ளனர்.
இந் நிலையில் புபுரஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மனோ ரஞ்சனவின் ஆலோசனைக்கு அமைய இரு சில்லரை கள்ளு வியாபாரிகளை கைது செய்து பொலிஸாரின் பாணியில் மேற்கொண்ட விசாரணைகளின் பொழுதே மேற்குறிப்பிட்ட இரகசிய கள்ளு உற்பத்தி நிலையம் பற்றி தெரியவந்துள்ளது
இதன் போது கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் கம்பளை மாவட்ட நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
