தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகம் தொழில் திணைக்களம் மற்றும் தொழில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மற்றும் முறைப்பாடுகளுக்கு தொழிலாளர்கள் சார்பாக அவர்கள் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆஜராகுவதில்லையென பாதிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது,
30 – 40 வருட காலங்களாக மாதாந்தம் சந்தாப்பணம் செலுத்தி அங்கம் வகிக்கும் இத் தோட்ட தொழிலாளர்கள் தமக்கு அநீதி எற்படும் சந்தர்ப்பங்களில் இத் தொழிற்சங்கங்களை நாடும் போது தமது சங்கத்திடம் செலவு செய்வதற்கும், போக்குவரத்து மற்றும் சட்டத்தரணிகளுக்கு வழங்கப் பணமில்லாத காரணத்தினால் தம்மால் தொழிற்சங்க காரியாலயங்கள் மற்றும் தொழில் நீதிமன்றங்களுக்கு வர முடியாது என்று கூறி எம்மை புறக்கணிக்கின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சில தோட்ட நிருவாகங்கள் தொழிலாளர்கள் மீது வேண்டுமென்றே பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்குத் தாக்கல் செய்யும் போது தொழிலாளர்கள் பணமின்றி தமது தங்க நகைகளை ஈடு வைத்து அல்லது விற்றே வழக்கு நடத்த வேண்டியுள்ளது என்கின்றனர்.










