” என் தந்தையின் மரணத்தால் எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பினை விடவும் எம் சமூகத்துக்கு ஏற்பட்ட இழப்பு மிக அதிகமாக இருப்பதை உணருகிறேன்.” – என்று சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும், அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
அமரர் சந்திரசேகரனின் 11ஆவது நினைவு தின நிகழ்வு தலவாக்கலை சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனுஷா,
” இன்று ( 01.01.2021) எனது தந்தையும் மறைந்த பெருந்தலைவருமாகிய அமரர் சந்திரசேகரன் அவர்களின் 11ஆவது சிரார்த்த தினமாகும். எனது தந்தை மக்களுக்கான பிரச்சினைகளின் போது வெறுமனே பேசி கொண்டுமட்டுமிருக்காமல், செயலில் காட்டிய நேர்மையான அரசியல் தலைவர், அவர் மறைந்த நாளிலும் பிறந்த நாளிலும் மட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் அவரது சேவைகளை எண்ணி பெருமைக் கொள்கிறோம்.
தான் சார்ந்த சமூக அவலத்தினைப் போக்குவதற்காக தனிமனிதனாக அவர் முகம் கொடுத்த துயரங்களும் வேதனைகளும் வீணாகவில்லை என்பதனை மக்கள் மத்தியில் இருந்து அறியும் போது அவரது மகளாக பெருமைப் படுகிறேன்.
ஆனால் துரதிஷ்டவசமாக அவரது மரணத்தின் பின்னர் அவர் ஆரம்பித்த அமைப்பு வியாபார ஸ்தானமாகியதோடு அவரது பெயரும் சேவைகளும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருவது வேதனையளிக்கிறது. ஆனால் விமர்சனங்களினால் இவர்களுக்கு பதில் அளிப்பதில் பயனில்லை என்பதால்தான் இன்று அவரது பெயரிலேயே அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி எனும் தொழிற்சங்கத்தையும் சந்திரசேகரன் மக்கள் முன்னணி எனும் அரசியல் கட்சியையும் ஆரம்பித்திருக்கிறோம்.
நேர்மையான சிந்தனை கொண்ட ஆதரவாளர்கள் உள்ளவரை என் பயணம் என் தந்தை வழியில் கடைசிவரை தொடரும்.
நேர்மையான அரசியல் தலைமை அமரர் சந்திரசேகரன் அவர்களின் ஆசியுடன் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார்.
