வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: 1,430 பேர் பலி: 51,000 பேர் மாயம்

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கி மூன்று நாட்களாகியுள்ள நிலையில், மீட்பு பணி தொடர்கின்றது.

இந்தத் துயர சம்பவத்தில் இதுவரை 1,430 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 51,000-க்கும் அதிகமானோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள், கடலோரப் பகுதியான லா குவைராவை (La Guaira) முற்றிலுமாகச் சிதைத்துள்ளன.

கடுமையான போக்குவரத்து நெரிசல் மீட்புப் பணிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறியதை அடுத்து, அந்தப் பகுதிக்கு மக்கள் செல்வதைக் கட்டுப்படுத்த வெள்ளிக்கிழமை இரவு முதல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசாங்க மீட்புக்குழுவினரின் பற்றாக்குறை காரணமாக, நிலநடுக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வெனிசுலா மக்கள் விரக்தியின் விளிம்பிற்கே சென்று, தங்கள் கைகளாலேயே இடிபாடுகளைத் தோண்டி எடுத்து வருகின்றனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிர் பிழைப்பதற்கான மிக முக்கியமான 72 மணி நேர அவகாசம் (Survival window) வேகமாக முடிவுக்கு வருவதாக உதவி முகமைகள் எச்சரித்துள்ளன.

லா குவைரா பகுதிக்குள் நுழைய விரும்பும் எவரும் இனி அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர், ஆனால் யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்த கூடுதல் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

அரசாங்கம் மிகத் தீவிரமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் காட்டிக்கொண்டாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு மீட்புக்குழுவினரை மிகக் குறைந்த அளவிலேயே பார்க்க முடிவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சனிக்கிழமையன்று ஐ.நா. வளர்ச்சித் திட்டம் (UNDP) வெளியிட்ட மதிப்பீட்டின்படி, இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட நேரடிப் பொருள் சேதங்களின் மதிப்பு 4.7 பில்லியன் டாலர் முதல் 8.7 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles