உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான திகதி எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகலுக்கு பின்னர் தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்படவுள்ளது.
காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணிவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும். 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நீதியாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு, பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை கட்டுப்பணம் செலுத்த முடியும். எனினும், 8,9, 13, 15மற்றும் 16 ஆம் திகதிகளில் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.










