அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: அறுவர் பலி!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உட்பட ஆறுவர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ஹட்சன் ஆற்றின் மீது ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியது.

இதில் விமானி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த சுற்றுலா பயணிகள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இறந்தவர்கள் ஸ்பெயின் நாட்டின் சீமன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஹெலிகாப்டர் புறப்பட்ட 18 நிமிடங்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளது. அதிலிருந்தவர்கள் சுதந்திர தேவி சிலை உள்ளிட்டவற்றை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பும் போது இந்த விபத்து நடந்துள்ளதாகவும், உயிரிழந்த 6 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் நியூயார்க் மேயர் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles