புதிய அரசமைப்பு: உறுதிமொழியை மறந்து செயற்படும் என்.பி.பி. அரசு!

புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்துவருகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

“ புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் எனவும், அதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும், தற்போது புதிய அரசியலமைப்பு பற்றி எவ்வித கருத்தாடலும் இடம்பெறவில்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக பல தடவைகள் உரையாற்றியுள்ளார். சர்வதேச மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார்.எனினும், வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என அவர் கூறாமல் இருக்கின்றார்.

2015 -2019 நல்லாட்சி காலத்தை தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பை அடிப்படையாகக்கொண்டு புதிய அரசியலமைப்பு இயற்றப்படும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது. அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதாக இருந்தால் அதற்குரிய பணிகள் தற்போது ஆரம்பித்திருக்க வேண்டும்.

அரசாங்கமொன்றின் 4 மற்றும் 5 ஆவது வருடத்தில் புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணியை முன்னெடுப்பது, சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது என்பனவெல்லாம் நடைமுறை சாத்தியமற்ற விடயமாகவே அமையும்.

ஆகவே, புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு எதிரணி முழு ஆதரவு வழங்கும்.” – என அஜித் பி பெரேரா எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

 

Related Articles

Latest Articles