பிரித்தானிய வர்த்தக நோக்கங்களுக்காக, இலங்கையில் பெருந்தோட்டங்களை அமைக்க, தென் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் வம்சாவளிகளான இன்றைய மலையக தமிழர்கள் தொடர்பில், பிரித்தானியாவுக்கு உள்ள தார்மீக மற்றும் சட்ட கடப்பாடுகளை நான், இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கை சந்தித்து மிக தெளிவாக எடுத்து கூறியுள்ளேன்.
அதேபோல், இன்றைய, என்பிபி அரசு முன்னேடுக்கும், தித்வா மீள் கட்டுமான வீடமைப்பு மற்றும் காணி வழங்கல் ஆகிய அரசாங்க நிவாரண திட்டங்களில் பாதிக்க பட்டுள்ள மலையக மக்கள் ஒதுக்கி வைக்கபட்டுள்ளார்கள் எனவும், அதேபோல் வடக்குக்கு அரசாங்க தலைவர்கள் அடிக்கடி சென்று வருவதை விட, அரசியல் கைதிகள் விடுதலை, புதிய அரசியலமைப்பு, பயங்கரவாத தடை சட்ட நீக்கம், மாகாண சபை சபை தேர்தல் நடத்தல், காணி விடுவிப்பு, ஆகிய அனைத்தையும் அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளது எனவும், உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக்குக்கு எடுத்து கூறினேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவரின் வசிப்பிடமான வெஸ்ட் மின்ஸ்டர் இல்லத்தில் , உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக்குக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்தது. இதன் போது, ஜனநாயக மக்கள் முன்னணியின், சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான இணை தலைவரும், தமுகூ அரசியல் குழு உறுப்பினருமான பாரத் அருள்சாமியும் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன், தனது எக்ஸ் தளம் உட்பட ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது;
மலையக தமிழர்:
குறிப்பாக, இன்றைய, அரசு முன்னேடுக்கும், ரூபா 50 இலட்ச தித்வா மீள் கட்டுமான வீடமைப்பு மற்றும் காணி வழங்கல் ஆகிய அரசாங்க நிவாரண திட்டங்களில் பாதிக்க பட்டுள்ள மலையக மக்கள் ஒதுக்கி வைக்கபட்டுள்ளார்கள்.
ஏனைய மக்களுக்கு வழங்க படும் தித்வா வீடமைப்பு நிவாரணங்கள் நமது மக்களுக்கு இல்லை. கண்டி, பதுளை, நுவரேலியா, மாத்தளை, கேகாலை, ஆகிய மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பெருந்தோட்ட மக்கள், தேசிய இடர் நிவாரண நிலையத்தின் கீழ் கொண்டு வர படாமல், ரூபா 27 இலட்ச இந்திய உதவி வீடமைப்பு திட்டங்களுக்கு உள்ளே தள்ள படுகிறார்கள்.
நாம் என்ன இந்திய பிரஜைகளா? இது இரண்டாம் தர இலங்கை குடியுரிமை இல்லையா? இது தென்னாபிரிக்காவில் காணப்பட்ட “அபார்தைட்” என்ற இன ஒதுக்கல் ஆகும் என்பதை பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகிறேன்.
மேலும், இன்று மலைநாட்டில், காணியுரிமையை மறுத்து, தொடர்மாடி கட்ட இந்த அரசாங்கம் இரகசிய திட்டம் தீட்டுகிறது. காணி உரிமை மறுக்க படும் எந்த ஒரு அரசாங்க திட்டத்தையும் நாம் ஏற்று கொள்ள போவதில்லை. இவற்றுக்கு எதிராக நாம் மக்களை அணி திரட்டி போராடுவோம்.
ஜனாதிபதி அனுர, மிக அழகாக பேசுகிறார். ஆனால், மலையக அப்பாவி மக்களின் விசேட பிரச்சினைகள் தொடர்பில் கலந்து உரையாட நேரம் ஒதுக்குங்கள் என, அவரது இருபது வருட நண்பராகிய நான், கடந்த வருடம் டிசம்பர் 14ம் திகதியே, அவருக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு, இதுவரை பதிலும் இல்லை. கலந்துரையாடலுக்கு நேரமும் ஒதுக்க படவில்லை. இது என்ன நியாயம்.
ஆகவே, மலையக தமிழருக்கு நியாயம் பெற்று தருவதில், அவர்களின் குடியுரிமை முழு குடியுரிமையாக வழங்க படுவதில், அவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்த படுவது நிறுத்த படுவதில், அவர்களுக்கு இரண்டு நூற்றாண்டுகளாக மறுக்க பட்டு வரும் காணி உரிமையை உறுதி படுத்துவதில், சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகிய அணிகளுக்கு பிரித்தானியா தலைமை பாத்திரம் வகிக்க வேண்டும் என நான் கோருகிறேன்.
ஈழத்தமிழர்:
ஜனாதிபதி அடிக்கடி வடக்குக்கு போய் வருகிறார். அங்கே பொங்கல் கொண்டாடுகிறார். இளைஞர்களுடன் “செல்பி” எடுக்கிறார். காலையில் நடை பயிற்சி செய்கிறார். மக்களுடன் உரையாடுகிறார். ஆனால் அங்கே தான் செய்து தருவதாக வாக்களித்த அனைத்தையும் காலவரை இன்றி இன்று அவர் ஒத்தி வைத்து விட்டார்.
உறுதி அளித்த மாகாணசபை தேர்தல் இல்லை. மாகாணசபை நிர்வாகம் ஆளுநர்கள் மூலம் நடத்த படுகிறது. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம் என்றார்கள். இன்று நீக்கம் இல்லையாம். இன்னொரு புதிய சட்டம் கொண்டு வர முயல்கிறார்கள். காணி விடுவிப்பு நின்று போய் விட்டது. அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றார்கள். இன்று எஞ்சி உள்ள பன்னிரெண்டு நீண்டகால கைதிகளை விடுவிக்க மறுக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பு பேச்சுகளை இதோ, அதோ, ஆரம்பிப்போம் என்றார்கள். அனைத்தும் அலங்கார வார்த்தைகளுடன் தொக்கி நிற்கின்றன.
ஆகவே, சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகிய அணிகளுக்கு பிரித்தானியா தலைமை பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்புகள் நிறைவேற உதவிட வேண்டும் என நான் கோருகிறேன்.










