ஐக்கிய நாடுகள் சபையின் 114 ஆவது கூட்டத்தொடரின் ஏழாம் நாளில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அவர்களுக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
கடந்தகால உதவிகளுக்கு நன்றி
இக்கலந்துரையாடலின் போது, உலக வங்கி இலங்கைக்குக் கடந்த காலங்களில் வழங்கிய நிதி மற்றும் அபிவிருத்தி உதவிகளுக்காக வடிவேல் சுரேஷ் அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
திட்வா புயல் பாதிப்புகள் மற்றும் மீள்குடியேற்றக் கோரிக்கை
தொடர்ந்து, அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ புயல் காரணமாகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய சேதங்கள் குறித்து உலக வங்கிப் பிரதிநிதிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக, பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புகளும் வாழ்வாதாரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எதிர்கால உதவித் திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அடிப்படை வசதிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான ஆதரவையும் உலக வங்கியிடம் அவர் வலியுறுத்தினார்.
பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம்
மேலும், பெருந்தோட்டத்துறையில் பணிபுரிபவர்களில் சுமார் 80 சதவீதமானோர் பெண்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு, தொழில் நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் மாற்று வருமான வாய்ப்புகளை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.
இக்கலந்துரையாடலின் போது, மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு நீண்டகால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இருதரப்பாரும் விரிவாகக் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.










