திட்டமிட்ட காலத்தை கடந்தும் முழுமையடையாத ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்திப் பணிகள்! பொதுமக்கள் கடும் அதிருப்தி

 

மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்பதே அரசாங்கங்களின் அடிப்படை பொறுப்பாகும்.

ஆனால் ஹட்டன் புகையிரத நிலையத்தை மையமாகக் கொண்டு சுமார் 306 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டம், பல ஆண்டுகளாக முழுமையான பயன்பாட்டிற்கு வராத நிலையில் காணப்படுவது தொடர்பில் பொதுமக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டம் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவிருந்தது.

திட்டமிடலின் படி, 2022 ஆம் ஆண்டளவில் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டிய இந்தத் திட்டம், தற்போது 2026 ஆம் ஆண்டையும் கடந்துள்ள நிலையிலும் முழுமையாக பயன்பாட்டிற்கு வராத நிலையில் காணப்படுகிறது.

ஹட்டன் புகையிரத நிலையத்தின் முன்புறத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடத் தொகுதியில் பயணிகளுக்கான நவீன ஓய்வு அறைகள், சுகாதார வசதிகள், டிக்கெட் வழங்கும் அலுவலகம், மேல்மாடிகளில் வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகன தரிப்பிட வசதிகள் என்பன உருவாக்கப்படவிருந்தன.

மலைநாட்டு சுற்றுலா மையமாக விளங்கும் ஹட்டன் நகரத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு இத்திட்டம் பெரும் நன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது காணப்படும் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. கட்டடத்தின் பல பகுதிகள் இன்னமும் முழுமையடையாமல் காணப்படுவதுடன், சில பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதையும், கட்டுமானப் பகுதிகளில் பாசி மற்றும் தாவரங்கள் வளர்ந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி கைவிடப்பட்டதன் விளைவாக கட்டடத்தின் சில பகுதிகள் சேதமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக நோர்வூட் பிரதேச செயலகத்தின் அலுவலக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.

மேலும் கடந்த ஆண்டு தீபாவளி வர்த்தக கண்காட்சி மற்றும் தற்காலிக வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதன் மூலம் நகர சபை வருமானம் ஈட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட முக்கிய நோக்கங்களான புகையிரத பயணிகளுக்கான வசதிகள், நிரந்தர வர்த்தக வளாகங்கள் மற்றும் வாகன தரிப்பிட வசதிகள் என்பன இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதுவரை சுமார் 306 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்தத் திட்டம் ஏன் திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவு பெறவில்லை? திட்ட தாமதத்திற்கு காரணமானவர்கள் யார்? செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணத்திற்கு பொறுப்புக் கூறுவது யார்? என்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

இலங்கையில் ஆட்சிகள் மாறும் போது முன்னைய அரசாங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் கைவிடப்படுவதும், பின்னர் மீண்டும் அவற்றை புனரமைக்க அல்லது நிறைவு செய்ய மேலதிக கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்தகைய நிலைமைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலதிக சுமையை ஏற்படுத்துவதோடு, மக்களின் வரிப்பணமும் பயனற்ற வகையில் விரயமாகும் அபாயத்தை உருவாக்குகின்றன.

எனவே ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, திட்டத்தின் தற்போதைய நிலை, செலவீன விவரங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக காத்திருக்கும் இந்த அபிவிருத்தித் திட்டம் உண்மையில் மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி இன்னும் பதிலின்றியே உள்ளது.

மலைவாஞ்சான்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles