அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக, ஜோர்டான் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டரை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
ஓமன் நாட்டின் கடற்கரைக்கு அருகே திங்கள்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர் விழுந்து
விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் தெரிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா புதன்கிழமை (ஜூன் 10) அதிகாலையில் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.
அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியது. பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களைத் தொடுத்தது. இதனை தடுக்கும் விதமாக அவ்விரு நாடுகளும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் பயன்படுத்தின.
அமெரிக்கப் படைகள் தங்கியிருந்த ஒரு விமானத் தளத்தை நோக்கி ஈரான் ஏவிய ஐந்து ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்டான் தெரிவித்துள்ளது. “ஈரானிலிருந்து அஸ்ராக் நோக்கி ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளை நாங்கள் இடைமறித்து சுட்டு வீழ்த்தினோம். இதன் விளைவாக ஏவுகணைகளின் பாகங்கள் சிதறி விழுந்தன. ஆனால் இதனால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை” என்று ஜோர்டான் ராணுவம் தெரிவித்தது. ஏப்ரல் மாதம் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதிலிருந்து, நடக்கும் மிகப்பெரிய மோதல் இதுவாகும்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள பகுதிகளில் இன்று புதிய தாக்குதல்கள் நடந்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியிலுள்ள கெஷ்ம் தீவு மற்றும் துறைமுக நகரமான பண்டார் அப்பாஸ் ஆகிய இடங்களில் இன்று அதிகாலை வேளையில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக மெஹர் மற்றும் ஃபார்ஸ் செய்தி நிறுவனங்கள் டெலிகிராமில் தெரிவித்தன.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பினால் எங்கள் பிராந்தியத்தை விட்டு வெளியேறுங்கள்” என்று தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டார். இந்த சூழலில் தங்களின் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நிறைவு செய்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு வளைகுடாவில் உள்ள அதன் நட்பு நாடுகளுக்கு சட்டப்பூர்வ மற்றும் தார்மீகப் பொறுப்பு உள்ளது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்தது.










