சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக மிக விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன என்று வருவது தொடர்பில் எதிரணிகள் ஆலோசனை நடத்திவருகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
சபாநாயகர் அரசமைப்புச் சட்டத்தையும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறியுள்ளார் என்று குற்றம் சுமத்தியே எதிர்க்கட்சியினர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கத் தயாராகி வருகின்றனர்.
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் எட்டு வெற்றிடங்களை நிரப்புவதற்குப் நாடாளுமன்றத்தின் ஆதரவை வழங்கத் தவறியதன் மூலம், சபாநாயகர் அரசமைப்பை மீறியுள்ளார் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதிடுகின்றனர்.
இது குறித்த விவரங்களைச் சபையில் சமர்ப்பித்த போதிலும், சபாநாயகர் அதில் கவனம் செலுத்தவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்படும் கடிதங்களை ஏற்பதற்குச் சபாநாயகர் மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வரைவு செய்யும் பொறுப்பு, எதிர்க்கட்சியில் உள்ள சட்டத்தரணிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் மீதான இந்த நகர்வு குறித்து எதிர்க்கட்சியினர் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வரும் நிலையில், இது தொடர்பான மேலதிக விவாதங்கள் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
