நீர்கொழும்பு சிறைக் கலவரம்: நடந்தது என்ன?

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்திய தகவல்படி, உயிரிழந்தவர்களில் 7 பேர் சிறை அதிகாரிகள் மற்றும் 20 பேர் கைதிகள் ஆவர். முன்னதாக உயிரிழப்பு 26 என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகப் பதிவாகியுள்ளது.

இந்த கலவரம் முதலில் ஜூலை 5ஆம் திகதி, நீர்கொழும்பு சிறையில் உள்ள கைதிக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலாக ஆரம்பித்தது. போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு கைதிக் குழுவும், அதற்கு எதிராக இருந்த மற்றொரு குழுவும் மோதியதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் கூறப்படுகிறது.

அன்றைய மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் 34 பேர் காயமடைந்தனர். மறுநாள், சிறை அதிகாரிகள் நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது, கலவரம் மீண்டும் தீவிரமடைந்தது.

இந்த மோதல் பின்னர் இலங்கையின் சமீபத்திய காலத்தின் மிகக் கொடூரமான சிறைக் கலவரங்களில் ஒன்றாக மாறியது. கலவரத்தின் போது கைதிகள் சிறை பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து இரண்டு T-56 assault rifles-ஐ கைப்பற்றியதாக பாதுகாப்பு தரப்புகள் தெரிவித்துள்ளன.

அந்த இரண்டு துப்பாக்கிகளும் இன்னும் மீட்கப்படவில்லை எனவும், அவற்றை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் அந்த ஆயுதங்களை பயன்படுத்தி சிறைக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த அதிகாரிகளை சுட முயன்றதாகவும் கூறப்படுகிறது.

கலவரத்தின் பின்னணியில் சிறைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பு பற்றிய தகவல்கள் முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகள் காட்டுகின்றன. கட்டுவெல்லேகம சுரேஷ் (Katuwellegama Suresh) என்ற கைதி ஒருவர், சிறைக்குள் இயங்கியதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் வலையமைப்பில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தல் தொடர்பான தகவல்கள் சிறை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதை அடுத்து பதற்றம் தீவிரமடைந்ததாகவும், இது எதிர்த்தரப்பு குழுக்களிடையே பழிவாங்கும் தாக்குதல்களைத் தூண்டி, இறுதியில் பரவலான வன்முறையாக மாறியதாகவும் புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். கட்டுவெல்லேகம சுரேஷ் தற்போது பூசா சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட வன்முறையில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் அதே வேளையில், மோதல்களிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை மேலும் பல கைதிகள் சிறைச்சாலையின் கூரைகள் மீது ஏறினர். பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் சிறையின் மருத்துவப் பிரிவை உடைத்து, போதைப்பொருள் பழக்கத்திற்கு சிகிச்சை பெற்று வரும் கைதிகளுக்கான மருந்துகள் உட்பட கணிசமான அளவு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளையும், பொதுவான மருந்துகளையும் கொள்ளையடித்தனர்.

மேலும், சிறையின் body scanner மற்றும் CCTV அமைப்புகளும் சேதப்படுத்தப்பட்டதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். இது சாதாரண கைதிக் குழு மோதல் மட்டுமல்லாமல், சிறை நிர்வாகத்தின் கண்காணிப்பு மற்றும் கடத்தல்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என அமைச்சர் கூறினார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் முயன்றதால், ஞாயிற்றுக்கிழமை இரவு சிறை வளாகத்தைச் சுற்றி பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் (STF) குவிக்கப்பட்டனர். சிறை அதிகாரிகள் ஆரம்பத்தில் உடனடி ஆயுதமேந்திய தலையீட்டை மேற்கொள்வதை விடுத்து, பேச்சுவார்த்தை மூலம் ஒழுங்கை நிலைநாட்ட முயன்றனர்.

திங்கட்கிழமை அதிகாலை வேளையில், கூரைகள் மீது ஏறியிருந்த கைதிகள் கீழே இறங்கி, தங்களின் அறைகளுக்குத் திரும்புவதற்குப் பதிலாக சிறையின் பொதுவான பகுதிகளில் ஒன்று கூடினர். இதனால் பதற்றமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவில்லை.

திங்கட்கிழமை காலை, வழக்கமான நீதிமன்ற இடமாற்றங்கள் மற்றும் குடும்பத்தினர் வருகைக்காக சிறை ஊழியர்கள் தயாராகிக் கொண்டிருந்தபோது வன்முறை கடுமையாக தீவிரமடைந்தது.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்கவின் கூற்றுப்படி, காலையில் சிறை அதிகாரிகள் கைதிகளுக்கு காலை உணவு வழங்க முயன்றபோது இந்த வன்முறை தொடங்கியது.

கைதி குழுக்களிடையே திடீரென வாக்குவாதம் வெடித்தது, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் தலையிட்டபோது, அவர்கள் ஒரு பெரிய குழுவினரால் வன்முறையாகத் தாக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தின்போது, சிறையின் விசேட பாதுகாப்புப் பிரிவினர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தடிகளாலும், கற்களாலும், ஏனைய மழுங்கிய பொருட்களாலும் தாக்கப்பட்டனர். இதில் ஏழு சிறை அதிகாரிகள் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.

இந்த ஒழுங்கீனத்திற்கு மத்தியில், கைதிகள் சிறைக் காவலர்களைக் கட்டுப்படுத்தி, சிறை பாதுகாவலர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு T-56 ரக துப்பாக்கிகளைப் பறித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வன்முறையின் பின்னர், நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம், கடற்படை, விமானப்படை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆகியவை இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டன.

தற்போது சிறையின் பாதுகாப்பு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பெண் கைதிகள் சிலர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும், கலவரத்தின் போது கைதிகளால் எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு T-56 துப்பாக்கிகளும் இதுவரை மீட்கப்படவில்லை.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தற்போது சுமார் 2,400 கைதிகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த சிறைச்சாலை முதலில் சுமார் 900 கைதிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முந்தைய ‘நெரிசலைக் குறைப்பதற்கான வேலைத்திட்டம்’ பற்றிய பதிவுகளில், நீர்கொழும்பு சிறையின் கொள்ளளவு 680 என்றும், அப்போது இருந்த கைதி எண்ணிக்கை 2,390 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கொள்ளளவு 680 ஆக எடுத்தாலும் 900 ஆக எடுத்தாலும், நீர்கொழும்பு சிறை அதன் கொள்ளளவை விட பல மடங்கு அதிகமான கைதிகளை தங்கவைத்திருந்தது என்பது தெளிவாகிறது.

இலங்கை முழுவதும் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலும் இந்த சம்பவத்தால் மீண்டும் தேசிய கவனத்திற்கு வந்துள்ளது. 2026 ஜூலை 5 நிலவரப்படி இலங்கை சிறைகளில் 41,250 கைதிகள் உள்ளனர். இது சிறைகளின் கொள்ளளவை விட சுமார் நான்கு மடங்கு அதிகம். சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தரவுகளின்படி, சுமார் 11,000 பேருக்கான இடவசதியே உள்ள சிறைகளில் கிட்டத்தட்ட 40,000 கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

World Prison Brief வெளியிட்டுள்ள சமீபத்திய தரவின்படி, 2026 ஜூன் 29 நிலவரப்படி இலங்கையின் மொத்த சிறைக்கைதிகள் தொகை 42,034 ஆகும். அதில் 73.8% பேர் விசாரணையை எதிர்நோக்கியுள்ள விளக்கமறியல் கைதிகள் (remand or pre-trial detainees) என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தீர்ப்பு வழங்கப்படாத அல்லது வழக்கு விசாரணை நடைபெற்று வரும் கைதிகளே இலங்கை சிறை நெரிசலில் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றனர்.

சிறை கொள்ளளவு தொடர்பில் பல்வேறு எண்ணிக்கைகள் வெளியாகியுள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியதன்படி, சிறை அமைப்பின் கொள்ளளவு 10,395 மட்டுமே; ஆனால் 42,000 இற்கும் மேற்பட்ட கைதிகள் தங்கவைக்கப்படுகின்றனர். World Prison Brief இல் கூறப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கொள்ளளவு 13,241 என்றாலும், அது 2023 ஓகஸ்ட் நிலவரத்தைச் சேர்ந்த பழைய தரவாகும்.

சிறைச்சாலை உள்கட்டமைப்பில் எவ்வித விரிவாக்கமும் செய்யப்படாமல், சமீபத்திய ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ள கைதிகளின் எண்ணிக்கையை நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறை அதிகாரிகளுக்கு இந்த நிலைமை பெரும் உளவியல் மற்றும் செயல்பாட்டு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கம்மன்பில கூறினார்.

ஒரு மனித உரிமை அமைப்பு ஐக்கிய நாடுகளுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், இலங்கையின் மொத்த சிறைக்கைதிகள் தொகை, அதன் உத்தியோகபூர்வ கொள்ளளவைவிட 286.6% அளவிற்கு கடந்துள்ளது எனக் கூறியுள்ளது. சில சிறைகளில் கைதிகள் ஒருவருக்கு 1.2 சதுர மீட்டர் மட்டுமே இடம் கிடைக்கிறது; சிலர் மாறி மாறி உறங்க வேண்டிய நிலை அல்லது கழிப்பறைகளின் அருகே உறங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நீர்கொழும்பு சிறைக் கலவரத்துக்கு பின்னர், சுமார் 700 கைதிகள் அங்குணகொலபெலஸ்ஸ, தும்பர, அனுராதபுரம், பொலன்னறுவை, குருவிட்ட உள்ளிட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கலவரம் தொடர்பாக அமைச்சரவை அனுமதியுடன் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் காரணங்கள், நிர்வாகத் தவறுகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க வேண்டிய பரிந்துரைகள் குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

அதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, இந்தச் சம்பவம் தனது அமைச்சின் கீழ் உள்ள திணைக்களத்தில் நடந்ததால் தாம் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்பு எந்த சூழலிலும் ஏற்க முடியாதது என்றும், குற்றவாளிகளை மட்டும் தேடுவது போதாது; சிறை அமைப்பின் அடிப்படை குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை எனவும் அவர் கூறினார்.

நீர்கொழும்பு சிறைக் கலவரம் வெறும் கைதிகளுக்கிடையிலான குழு மோதலாக மட்டும் பார்க்கப்பட முடியாது. ஆயுதங்கள் கைதிகளிடம் சென்றதாகக் கூறப்படும் சந்தேகம், CCTV மற்றும் body scanner சேதப்படுத்தப்பட்டமை, சிறைக்குள் போதைப்பொருள் வலையமைப்பு குறித்த குற்றச்சாட்டுகள், குறைந்த பணியாளர்கள் மற்றும் மிகக் கடுமையான நெரிசல் ஆகியவை ஒன்றாக சேர்ந்து, இலங்கை சிறை நிர்வாகத்தில் ஆழமான சீர்திருத்தம் தேவை என்பதை வெளிப்படுத்துகின்றன.

நீர்கொழும்பு சிறைச்சாலை

தற்போதைய கைதி எண்ணிக்கை: சுமார் 2,400

கொள்ளளவு: சுமார் 900; சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முந்தைய தரவுகளின்படி 680

உயிரிழப்பு: 27 (7 சிறை அதிகாரிகள், 20 கைதிகள்)

இலங்கை முழுவதும் மொத்த கைதிகள் 
உள்ளூர் தரவுகளின்படி: 41,250 (ஜுலை 5, 2026 நிலவரப்படி)
World Prison Brief தரவுகளின்படி : 42,034 கைதிகள் (ஜுன் 29, 2026 நிலவரப்படி)
உள்ளூர் தரவுகளின்படி தற்போதைய கொள்ளளவு: சுமார் 10,000–11,000 (அவற்றில் தடுப்புக் காவல் அல்லது விசாரணைக்கு முந்தைய கைதிகள் 73.8%)

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles