அரசாங்கம், பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரையறுக்க திட்டமிட்டுள்ளதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் நோக்கில், அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள திருத்தங்களின் ஒரு பகுதியாக இது அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பதவிக்கு அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தை நிர்ணயிக்கும் இந்த நடவடிக்கையினால், ஓய்வு பெறும் வயதை எட்டாவிட்டாலும் கூட, பிரதம நீதியரசர் ஆறு ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த பின்னர் பதவி விலக வேண்டும்.
முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, உயர்நீதிமன்ற நீதியரசரின் ஓய்வு பெறும் வயது 65இல் இருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இல் இருந்து 65 ஆகவும் உயர்த்தப்படும்.
மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதும் இரண்டு ஆண்டுகள் அதிகரிக்கப்படும்.
சட்டமா அதிபரின் ஒப்புதலுக்குப் பின்னர், அடுத்த மாத தொடக்கத்தில் இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மூத்த அரசாங்க வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த முன்மொழிவுகள் ஏற்கனவே அரசாங்க சட்ட வரைவாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நவம்பர் மாதம் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்தச் செயல்முறையை நிறைவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.










