FIFA – UEFA மோதலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி நடக்கும் U-20 மகளிர் உலகக் கோப்பை

 

FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோவுக்கு (Gianni Infantino) எதிராக உலகளவில் கிளம்பியுள்ள எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் முதல் FIFA தொடராக ‘மகளிர் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை’ உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் தொடங்கவுள்ள இத்தொடருக்கான ஆயத்தப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகப் போட்டியை நடத்தும் போலந்து நாடு தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பையின் வர்த்தக உரிமைகளில் 20 சதவீதத்தை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்று, சுமார் 4.2 பில்லியன் டாலர்களைத் திரட்டும் இன்பான்டினோவின் திட்டத்தை எதிர்த்து, ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) 55 உறுப்பு நாடுகளும் FIFA தொடர்களை புறக்கணிக்கப் போவதாக ஏகமனதாக வாக்களித்தன.

இன்பான்டினோ பின்னர் அந்தத் திட்டத்தைக் கைவிட்ட போதிலும், இந்த விவகாரம் நிர்வாக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து போலிஷ் காற்பந்துச் சங்கம் (PZPN) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த அறிக்கையில், “மகளிர் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான ஆயத்தப் பணிகள் ஒப்புக்கொள்ளப்பட்ட கால அட்டவணையின்படி இறுதித் கட்டத்தை எட்டியுள்ளன.

பங்குபெறும் எந்தவொரு அணியும் விலகுவது குறித்து PZPN-க்கு எந்தத் தகவலும் வரவில்லை. தற்போதைய சூழல் விரைவில் சீரடையும் என நம்புகிறோம். பல இளம் வீராங்கனைகளின் விளையாட்டு வாழ்க்கையில் இது மிக முக்கியமான தருணம் என்பதால், போட்டியைச் சிறப்பாக நடத்துவதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 5 முதல் 27 வரை நடைபெறவுள்ள 24 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் பங்கேற்பதை பிரான்ஸ் முதன்முதலில் உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்தும் தனது பங்கேற்பை உறுதி செய்துள்ளது.

“அடுத்த மாதம் போலந்தில் நடைபெறவுள்ள தொடருக்கு நியூசிலாந்து அணி அனுப்பப்படுகிறது. மகளிர் காற்பந்தாட்ட வளர்ச்சியில் இத்தொடர் மிகவும் முக்கியமானது” என்று நியூசிலாந்து காற்பந்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இங்கிலாந்து மற்றும் கனடா காற்பந்து அமைப்புகள் இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டன. அமெரிக்கா இத்தொடரில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அமெரிக்கக் காற்பந்துச் சம்மேளனம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

புறக்கணிப்பு அச்சுறுத்தல் நீடிப்பு

கடந்த வாரம் ஐரோப்பிய காற்பந்து அமைப்பான யுவேஃபா (UEFA) தனது புறக்கணிப்பு அச்சுறுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது.

FIFA போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது தொடர்பான நிபந்தனைகளில் UEFA உறுதியாக உள்ளது. அந்த நிபந்தனைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. மேலும் ஜியானி இன்பான்டினோவின் தலைமை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கடந்த ஜூலை 30 அன்று நாங்கள் வெளியிட்ட அறிக்கையில் எந்த மாற்றமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தீவிரமடைந்தால் மகளிர் காற்பந்தாட்டமே முதலில் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏனெனில், அக்டோபர் மாதம் மொராக்கோவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பையும், 2027 இல் பிரேசிலில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கான தகுதிப் போட்டிகளும் வரிசையாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles