கண்டி எசல பெரஹெராவிற்குச் செல்லும் பக்தர்களுக்காக புதிய தகவல் சேவை!

2026 கண்டி எசல பெரஹெரா விழாவில் பங்கேற்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான உடனுக்குடனான (Real-time) தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பொலிஸார் சிறப்புத் தகவல் மேலாண்மை அமைப்பு (Information Management System) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க வருடாந்த கண்டி எசல பெரஹெரா ஆகஸ்ட் 18 முதல் 28 வரை நடைபெறவுள்ளது.

இதனையொட்டி வருகை தரும் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதி செய்வதற்காகச் சிறப்புப் பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய அமைப்பின் மூலம்:

வாகன நிறுத்துமிடங்கள் (Parking areas)

பெரஹெரா வீதிகள் மற்றும் பார்வையிடும் இடங்கள்

சுகாதார வசதிகள்

கூட்ட நெரிசலில் பிரிந்தவர்கள் அல்லது தவறவிட்ட குடும்ப உறுப்பினர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் மையங்கள் ஆகியவை குறித்த நேரலைத் தகவல்களைப் பொதுமக்கள் எளிதாகப் பெற முடியும்.

பொதுமக்கள் இந்தச் சேவையை இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk இல் உள்ள “Kandy Esala Perahera” என்ற இணைப்பின் மூலமாகவோ அல்லது kandyesalaperahera.police.lk என்ற பிரத்யேக இணையத்தள முகவரி மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

கைப்பேசிகள், கணினிகள் மற்றும் டேப்ளட்களின் (Tablets) மூலம் அணுகக்கூடிய இந்தச் சேவை, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பயணத் தாமதத்தைக் குறைக்கவும், பயணங்களைச் சீராகத் திட்டமிடவும் உதவியாக இருக்கும் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, எசல பெரஹெராவைக் காண்பதற்காகக் கண்டிக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்தை உறுதிசெய்ய இச்சேவையைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Latest Articles