புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.
9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் தேர்வு உட்பட ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், பாராளுமன்றம் 3 மணிவரை சபாநாயகரால் ஒத்திவைக்கப்படும்.
இதன்பிரகாரம் மாலை 3 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும். இதன்போதே ஜனாதிபதியால் புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் முன்வைக்கப்படும்.
ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் கொள்கை விளக்கம் தொடர்பில் பிரிதொரு நாளில் விவாதம் நடத்தலாம். ஆனால், அதுமீது வாக்கெடுப்பை கோரமுடியாது என்பதுடன் வாக்கெடுப்பை நடத்தவும் முடியாது.