தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் மயில்வாகனம் திலகராஜை நீக்குமாறு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைவர் பழனி திகாம்பரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவருகின்றது.
பொதுத்தேர்தலின்போது சங்கத்துக்கு எதிராக செயற்பட்ட அவர் தற்போது ஊடகங்கள் வாயிலாக தலைமையை விமர்சித்துவரும் நிலையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியை திலகராஜ் வகிப்பதால் அவரை உடனடியாக பதவி நீக்கசெய்யமுடியாதநிலை காணப்படுவதாகவும் இது தொடர்பில் சட்டஆலோசனை பெறப்பட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து அமரர் செல்லசாமி வெளியேறியபோது அவர் சேவல் சின்னத்தையும் எடுத்துச்சென்றுவிட்டார். இதனால் அதனை மீளப்பெறுவதற்கு அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு கடும் பிரதயத்தனங்களில் ஈடுபடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தொழிலாளர் தேசிய சங்கம் தொழிற்சங்கமாகவும், தொழிலாளர் தேசிய முன்னணி அரசியல் கிளையாகவும் செயற்பட்டுவருகின்றது. இதில் முன்னணியின் பொதுச்செயலாளராகவே திலகர் செயற்பட்டுவருகின்றார். முன்னணியின் சின்னம் அரிவாள் என்பது குறிப்பிடத்தக்கது.