லஞ்சமாகக் கிடைக்கும் பணத்தைத் தங்களுக்குள் ‘நேர்மையாக’ப் பங்கிட்டுக் கொள்வதற்காக, உள்ளாட்சி கவுன்சிலர்கள் சிலர் புனிதமாகக் கருதப்படும் கங்கை நீரின் மீது சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட சம்பவம் இந்தியா உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாநகராட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர் ஒன்று கூடி இந்தச் சத்தியப் பிரமாணத்தைச் செய்துள்ளனர்.
அந்த வீடியோவில், நபர் ஒருவர் போத்தலில் இருக்கும் கங்கை நீரை அங்கிருக்கும் மற்ற கவுன்சிலர்களின் கைகளில் ஊற்றுகிறார்.
அதைத் தொடர்ந்து, “மாநகராட்சிக்கு லஞ்சமாகக் கிடைக்கும் பணம் 60 கவுன்சிலர்களுக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும். நமது குழுவில் உள்ள யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டால், அனைவரும் ஒற்றுமையாக அவருக்கு ஆதரவாக நிற்போம்” என்று அவர் கூற, மற்றவர்களும் கையில் கங்கை நீரை ஏந்தியபடி அதை அப்படியே திருப்பிச் சொல்லி சத்தியம் செய்கின்றனர்.
மேலும், இந்த ஒப்பந்தத்தை மீறி நடப்பவரை ‘துரோகி’ என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளே லஞ்சப் பணத்தைப் பிரிக்க புனித கங்கை நீரைப் பயன்படுத்தி சத்தியம் செய்துள்ள இந்த வீடியோ, அம்மாநில அரசியலில் பெரும் ஊழல் புயலைக் கிளப்பியுள்ளது.
மாநகராட்சி ஆணையர் விளக்கம்
இச்சம்பவம் குறித்து ஷாஜஹான்பூர் மாநகராட்சி ஆணையர் சவும்யா குருராணி அளிக்கையில், “இந்த வீடியோ கடந்த 2025 நவம்பர் மாதத்தில், முந்தைய மாநகராட்சி ஆணையர் பதவிக் காலத்தில் பதிவு செய்யப்பட்டதாக முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது.
இருப்பினும், விவகாரத்தின் தீவிரத்தைக் கருதி இது தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.










