தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து, கட்சி தொடங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் குறித்த பல்வேறு செய்திகள் வட இந்திய சமூக ஊடகப் பக்கங்களில் சமீபகாலமாக அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றன.
தேர்தல் பிரச்சாரக் காலத்திலிருந்தே அவரது கட்சியின் தொழில்நுட்பப் பிரிவினர் விஜய்யின் வீடியோக்களை மில்லியன் கணக்கான மக்களிடம் கொண்டு சேர்த்த நிலையில், தற்போதும் அவரது ஆட்சியின் அதிரடி நடவடிக்கைகள் சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இருப்பினும், முந்தைய அரசின் திட்டங்கள் சிலவற்றை தற்போதைய த.வெ.க. அரசின் திட்டங்களாக சித்தரிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதோடு, லஞ்சம் கொடுப்பவர்கள் குறித்து புகார் அளித்தால் ஒரு இலட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என பரப்பப்பட்ட செய்தி போலியானது என்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அண்மையில் அம்பலமானது.
இந்த வரிசையில், தற்போது தமிழ்நாட்டைத் தாண்டி உத்தரப் பிரதேசம், பீகார், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலங்கள் (Influencers) பலர், முதல்வர் விஜய் குறித்து அப்பட்டமான போலிச் செய்திகளைப் பகிர்ந்து வருவதை ‘இந்தியா டுடே’ ஊடகம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
குறிப்பாக, தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்தால் அவரது முழு மருத்துவக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 24 மணி நேரத்திற்குள் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக போலியான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோக்களை உண்மை என நம்பி பல வட இந்தியப் பயனர்கள் முதல்வர் விஜய்க்குப் பாராட்டுக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
நரேந்திர மோடி அவர்கள் பிரதமராவதற்கு முன்னர், குஜராத்தில் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாகப் பல மொழிகளில் திட்டமிட்டு போலிச் செய்திகள் பரப்பப்பட்டு ஒரு அலையை உருவாக்கியதைப் போன்றே தற்போதும் செய்யப்படுவதாகச் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தத் தவறான தகவல்கள் குறித்து ‘இந்தியா டுடே’ ஊடகம் சம்பந்தப்பட்ட வட இந்திய சமூக ஊடகப் பிரபலங்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
வட இந்தியாவில் ஒரே மாதிரியான இத்தகைய போலிச் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுவது ஏன் என்றும், முதல்வர் விஜய் தேசிய அளவில் மோடிக்கு நிகராக முன்னிறுத்தப்படுகிறாரா என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் தற்போது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.










