முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை முழுப் பொலிஸ் மரியாதையுடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு, ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு வழக்கமாக வழங்கப்படும் பொலிஸ் மரியாதை வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
இதற்கமைய, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் ஜூலை 20ஆம் திகதி முழுப் பொலிஸ் மரியாதையுடன் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அவரின் பூதவுடல் தற்போது கொழும்பிலுள்ள தனியார் மலர்ச்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் இன்று (ஜூலை 19) முதல் தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்த முடியும்.
நாட்டின் 35ஆவது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன, தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயம் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை காலை (ஜூலை 17) காலமானார்.
அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், அவர் தனது பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் நம்புகின்றனர்.
சி.டி. விக்ரமரத்னவின் உடலுக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர் திறந்த தீர்ப்பு (Open verdict) வழங்கப்பட்டது.
கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி இந்தத் தீர்ப்பை வழங்கியதுடன், மேலதிக பரிசோதனைக்காக உடலின் மாதிரிகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே பொலிஸாரும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் பொலிஸ் மா அதிபரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி, தடயவியல் பரிசோதனைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது மனைவி மற்றும் மூன்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.










