சஜித்தால் முடியவே முடியாது – அடித்து கூறுகிறார் சண்.பிரபா
உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா!
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரி்க்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Who என்று அழைக்கப்படுகிற உலக சுகாதார நிறுவனம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது ஐ.நா.சபையின் துணை அமைப்பாகும்.
உலகளவிலான சுகாதார விவகாரங்களை இந்த அமைப்பு கையாள்கிறது. 194 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. ஆனாலும் இந்த நிறுவனம், செயல்படுவதற்கான முக்கிய நிதி பங்களிப்பை அமெரிக்காதான் வழங்கி வருகிறது.
தற்போது உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி, பெருத்த உயிர்ச்சேதங்களையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு உதவி செய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக சீனா கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.
இதனிடையே கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனா சார்பு நிலையில் உள்ளதால் அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்வதாக கடந்த மே மாதம் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
அந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த பல மில்லியன் டாலர்கள் நிதியை நிறுத்தினார்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறியது.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு கடந்த 6 ஆம் திகதி அனுப்பிய கடிதத்ததில் கூறியுள்ளதாவது:
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்கிறது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6- ஆம் திகதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் பரப்புரைச்சமர் உக்கிரம்!
நுவரெலியாவில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், அடுத்தவாரம் முதல் சூறாவளிப்பிரச்சாரம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 275 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
8 ஆசனங்களை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளில் இருந்து 132 பேரும், 13 சுயேட்சைக்குழுக்களில் இருந்து 143 பேரும் களமிறங்கியுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியானது ஐக்கிய மக்கள் சக்தியின்கீழ் தொலைபேசி சின்னத்தில் களமிறங்கியுள்ளது.
பிரதான கட்சிகள் தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தாலும் அடுத்தவாரம் முதலே சூறாவளிப்பிரச்சாரம் ஆரம்பமாகவுள்ளது.
தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய கலந்துரையாடல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய , கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க மற்றும் பதில் பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்கிரமரத்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிட்டுள்ளபடி முறையாக தேர்தலை நடத்துவதற்கு, கொவிட்-19 கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையம், பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது :
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் வாக்களிப்பதற்காக முப்படையினரின் உதவியைப் பெற்றுக் கொள்வது பற்றியும் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படுகின்ற தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு எவ்வாறு வாக்களிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக வைரஸ் பரவல் தீவிரமடைந்தால் முன்னெடுக்கப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றியும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அபிவிருத்திக்காக வாக்களியுங்கள்! முத்தையா பிரபு
இம்முறை எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதால் எவ்வித பயனும் இல்லை என்றும் அடுத்து ஐந்து வருடம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு வாக்களிப்பது மட்டுமே நுவரெலியா மக்களுக்கு அபிவிருத்தியை கொண்டுவர வழி ஏற்படுத்தும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரபு,
இதுவரை இந்த மாவட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் இருந்தார். ஆனால் விளையாட்டுத் துறைக்கு ஒன்றையும் செய்யவில்லை. கல்வி அமைச்சர் இருந்தார். கல்வியின் தரமும், பாடசாலைகளும் அப்படியே இருக்கின்றன. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் இருந்தார். லயன்கள் இன்னமும் இன்னமும் அப்படியே இருக்கின்றன. 50 ரூபா சம்பளத்தைக் கூட இவர்களினால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை.
அடுத்த ஐந்து வருடங்களும் ஜனாதிபதி, பிரதமர் கீழே ஆட்சித் தொடரப் போகிறது. எனவே, ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு வாக்களிப்பதன் மூலமே மக்களுக்கான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரையில் இடைத் தரகர்கள் யாரும் இல்லை. நான் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் நேரடியாக பேசுவேன். என்னை களமிறக்கியது அவர்களே. அதனால் மக்கள் எதற்காக வாக்களிக்கிறார்களே அந்தத் தேவையை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
எதிர்க்கட்சிக்கு வாக்களித்து, உங்களின் வாக்குகளைக் குப்பையில் போட்டுவிடாதீர்கள். மொட்டுச் சின்னத்திற்கு மலையக மக்கள் இம்முறை வாக்களிக்க வேண்டும். எனது சொந்த செலவில் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க முயற்சித்தேன். அதற்கும் தடை ஏற்படுத்தினார்கள். எனவே அபிவிருத்தி செய்யக்கூட அதிகாரம் தேவைப்படுகிறது. அந்த அதிகாரத்தையும், அங்கீகாரத்தையும் தர வேண்டும் என மக்களிடம் உரிமையாக கேட்டுக் கொள்கிறேன். மக்கள் அங்கீகாரத்தைத் தந்தபின்னர், நுவரெலியாவிற்கான அபிவிருத்தி நான் நேரடியாக எடுத்து வருவேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.” என்று முத்தையா பிரபு மேலும் தெரிவித்தார்.
அன்று 13 பிளஸ் என கூறிய மஹிந்த இன்று அதிகாரப் பகிர்வை எதிர்ப்பது ஏன்?
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும். தீர்வு விடயத்தில் இதற்கு அப்பால் செல்லமாட்டோம் – என்று முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
13 பிளஸ் என அன்று கூறிய மஹிந்த ராஜபக்ச, இன்று வாக்குகளுக்காக அதிகாரப்பகிர்வு தொடர்பில் வீண் அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்திவருகின்றார் எனவும் கிரியல்ல குற்றஞ்சாட்டினார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் விசேட அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டின் அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதே எமது நோக்கமாகும். இதுவே தீர்வு திட்டத்துக்கான எமது உறுதிமொழியாகவும் இருக்கின்றது. அதிகாரப்பகிர்வை நாம் ஏற்கின்றோம் – அனுமதிக்கின்றோம்.
குறிப்பாக 13 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரங்கள் போதாது, அதற்கு அப்பால் (13 பிளஸ்) செல்லவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச அன்று கருத்து வெளியிட்டிருந்தார். நாம் 13 பிளஸ் பற்றி பேசவில்லை. 13 இல் உள்ள அதிகாரங்கள் முழுமையாக பகிரப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தோம். வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல ஏனைய மாகாணங்களுக்கும் இந்த அதிகாரப்பகிர்வு கோட்பாடு பொருந்தும்.
தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புமூலம் ஆளுங்கட்சிக்கு சாதாரணப்பெரும்பான்மைக்கூட கிடைக்காது (113) என்பது உறுதியாகியுள்ளது. எனவே, ஐக்கிய மக்கள் சக்தியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைத்துவிடும் என ஆளுந்தரப்பு அஞ்சுகின்றது.
இந்த பயம்காரணமாகவே இனவாதம் பேசி வாக்குகளை அதிகரித்துக்கொள்வதற்காக சஜித் பக்கமே இனவாதிகள் உள்ளனர் என பரப்புரை முன்னெடுக்கப்படுகின்றது.” – என்றார்.
‘உலகளவில் 1 கோடியே 17 லட்சம் பேருக்கு கொரோனா பரவியது’
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 5 லட்சத்து 41 ஆயிரத்து 748 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 836 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 44 லட்சத்து 62 ஆயிரத்து 743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவில் இருந்து 67 லட்சத்து 75 ஆயிரத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மலையக பல்கலைக்கழகம் எப்போது அமையும்?
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் முதலாவது சிரார்த்த தினத்தன்று மலையகத்துக்கான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும் என்று இ.தொ.காவின் உப தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
இறம்பொடையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” கடந்த காலங்களில் பட்டம் இருக்கிறதா, உயர்தரம் சித்தியடைந்துள்ளீர்களா, பட்டப்பின் படிப்பு என்றெல்லாம் கேள்விகேட்டே வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று சாதாரணதரப்பரீட்சையை பூர்த்திசெய்யமுடியாத ஒரு லட்சம் பேருக்கு அரச துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, நியமனங்களை வழங்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
கடந்த ஆட்சியில் வேலை எவ்வாறு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது? குருணாகலை பகுதியில் தேங்காய் பறித்துக்கொண்டிருந்தவர்களை, இங்கே கொண்டுவந்து பாடசாலைகளில் உதவியாளர்களாகவும், காவலாகிளாகவும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். நமது பகுதி புறக்கணிக்கப்பட்டிருந்தது. கல்வி இராஜாங்க அமைச்சர் இருந்தும் என்ன பயன்? ” எனவும் அவர் குறிப்பிட்டார்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்.
தேர்தல் சட்டத்தைமீறிய அறுவர் பதுளையில் கைது!
பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவொன்றின் ஆதரவாளர்கள் ஆறு பேர் தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில்,கொஸ்லந்தை பொலிஸாரால் இன்று (07-07-2020) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைதானவர்கள் பயணித்த வேன் ஒன்றையும், 346 பிரச்சார போஸ்டர்கள், பிரச்சார கையேடுகள் 253 ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்ட சுயேச்சைக் குழுவினரை ஆதரவிக்கும் வகையிலேயே மேற்படி பிரச்சார போஸ்டர்கள், பிரச்சாரக் கையேடுகள் மீட்கப்பட்டனவென்பதும் குறிப்பிடத்தக்கது.
கைதுசெய்யப்பட்டவர்கள் ஆறுபேர் மீது,தேர்தல் சட்டவிதிகள் மீறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர்கள் விசாரணைகளின் பின்னர்,பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று,கொஸ்லந்தைபொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்ணசிரி பண்டார தெரிவித்தார்.
எம். செல்வராஜா, பதுளை
அக்கரப்பத்தனையில் குளவிக்கொட்டு – 35 பேர் பாதிப்பு!
அக்கரப்பத்தனை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் 35 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊட்டுவள்ள பிளேமோர் பிரிவில், தேயிலை மலை இலக்கம் 8, மலை இலக்கம் 3 ஆகியவற்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள்மீது கலைந்துவந்த குளவிகள் சரமாரியாகக் கொண்டியுள்ளன.
குளவி தாக்குதலுக்கு இலக்காகி பாதிக்கப்பட்ட 30 பெண் தொழிலாளர்களும், 05 ஆண் தொழிலாளர்களுமே அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் குளவிக்கொட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நால்வர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்காணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்