கைகட்டி வாழ்ந்த யுகம் முடிந்துவிட்டது – இனி தலைநிமிர்ந்து வாழ்வோம்!
ஹட்டன், குடாகமவில் விபத்துக்குள்ளானது வேன்!
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வேன் ஒன்று இன்று (07) அதிகாலை விபத்துக்குள்ளானது.
ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற வேனே, குடாகம பகுதியில் வைத்து, பாதையை விட்டுவிலகி வீதியோர பாதுகாப்பு கல்லில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளானது.
வேன் சாரதி தலைமறைவாகியுள்ளார் என தெரிவித்த பொலிஸார்,
விபத்து தொடர்பில் முறைபாடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறிப்பிட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நிலவுவதால் ஹட்டன் – நுவரெலியா வீதி வழுக்கும் தன்மை காணப்படுவதால்
சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்
வெலிக்கடை சிறைச்சாலை கைதிக்கு கொரோனா தொற்று!
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதியொருவர் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
குறித்த கைதி கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு தடுத்துவைக்கப்பட்டவரென அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கைதிக்கு கொரோனா பரவியுள்ள நிலையில், அவருடன் தொடர்பை பேணியவர்கள், அவருடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள், சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோருக்கும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். தற்போது அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அரசால் பெறமுடியாது – அநுர
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறமுடியாது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.
” போர்முடிவடைந்த பின்னர் 2010 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதுகூட மஹிந்த தரப்பால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை மக்கள் வாக்குகள்மூலம் பெறமுடியாமல்போனது.
ஆனால், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களை விலைக்குவாங்கி, பெரும்பான்மையை உருவாக்கிக்கொண்டு 18 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தனர். இம்முறையும் ஆளுந்தரப்பால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறமுடியாது. தேர்தல் முடிவடைந்ததும் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியலே நடக்கும்.” – என்றார்.
ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம் – ரமேஷ் பத்திரண
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் எண்ணம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது என்று அக்கட்சியின் உறுப்பினரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
” நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை நாம் எதிர்பார்க்கின்றோம். அந்த வரத்தை மக்கள் வழங்குவார்கள் எனவும் நம்புகின்றோம்.
சிலவேளை, மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால்கூட நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களுக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறமுடியும்.
எனவே, எமது கூட்டணியிலுள்ள தரப்புகளைதவிர, ஏனைய கட்சிகளை இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்கும் எண்ணம் இல்லை.” – என்றும் கூறினார்.
மொட்டு கூட்டணிக்குள் மோதல் ஆரம்பம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலருக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது. இதனால் இரு தரப்பினருமே பொதுவெளியில் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்துவருகின்றனர்.
2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிடும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சில மாவட்டங்களில் தனித்து களமிறங்கியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பவே முடியாது என்றும் அவருடன் தொடர்பை வைத்துள்ள உறுப்பினர்களுக்குகூட மொட்டுகட்சி ஆதரவாளர்கள் வாக்களிக்ககூடாது என்றும் பிரசன்ன ரணதுங்க தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டுவருகிறார்.
அத்துடன், மொட்டு கட்சியின் பொலன்னறுவை மாவட்ட வேட்பாளர் ரொஷான் ரனசிங்க, அநுராதபுரம் மாவட்ட வேட்பாளர் எஸ்.எம். சந்திரசேன, களுத்துறை மாவட்ட வேட்பாளர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
” ஜனாதிபதி தேர்தலின்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் எம்முடன் இணைந்து போட்டியிடுகின்றனர். ஆனால், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே மக்கள் பேராதரவை வழங்கவேண்டும்.” – எனவும் குறிப்பிடுகின்றனர்.
பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் இவ்வாறான கருத்துகளால் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, உப தலைவர் மஹிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கத்துக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை இல்லாது செய்யும் நோக்கிலேயே இவர்களின் கருத்துகள் அமைந்துள்ளன. ஐ.தே.கவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையிலேயே அவர்களின் கருத்துகள் அமைந்துள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சதாசிவத்துக்கு ஆதரவாக எஸ்.பி. பிரச்சாரம்
இன்று மலையக மக்களின் தலைமையை எடுத்து வழிநடத்தும் அனுபவமும் சக்தியும் சதாசிவத்திடம் இருக்கின்றது என முன்னாள் அமைச்சர் எஸ். பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் பெருந்தோட்ட பகுதியில் பாடசாலைகள், விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ததோடு பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு அரசாங்க தொழில்வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தார்.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான சுப்பையா சதாசிவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர், தொழிற்சங்க அரசியல் அனுபவமுள்ள சதாசிவத்தை பாராளுமன்றத்திற்கு அனுப்பி அவருக்கு பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு அமைச்சை பெற்றுக்கொடுத்து மலையக பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்வோம்.
மலையகத்தின் ஏகோபித்த தலைவராக இருந்த அமரர் அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமானுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு மலையகத்திற்கு பெரும் சேவை செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவத்தை மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் மலையகத்திலுள்ள தோட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்துக்கொள்ளலாம்.
அமரர் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மலையக தலைவராக இருந்தார். இன்று அவரும் எம்முடன் இல்லை என்றார்.
உலகை புரட்டி எடுக்கும் கொரோனா – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 5 லட்சத்து 38 ஆயிரத்து 168 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 16 லட்சத்து 3049 ஆயிரத்து 415 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 45 லட்சத்து 12 ஆயிரத்து 256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 697 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 65 லட்சத்து 79 ஆயிரத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 38 ஆயிரத்து 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
‘காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்களிக்கலாம்’
பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணிநேரத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காலை ஏழு மணி முதல் மாலை 5 மணிவரை வாக்களிக்கமுடியும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வழமையாக காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை 9 மணிநேரமே வாக்களிப்பு இடம்பெறும். எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தேர்தலை நடத்தவேண்டியதாலேயே வாக்களிப்பு நேரம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபா எங்கே? ஹக்கீம் கேள்வி!
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 மார்ச் முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்தது.
ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று ஏழு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறு மக்களை ஏமாற்றும் அரசாங்கத்துக்கு ஆகஸ்ட் 5 ஆம் திகதி பொது மக்கள் தக்கபாடம் புகட்டவேண்டும்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.