Home Blog Page 4039

ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19 இல் ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) ரி-20  தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘கொரோனா’வால் ஐ.பி.எல். போட்டி தொடரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுவதற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானம் எடுத்திருந்தது. அதற்கான அனுமதியை மத்திய அரசாங்கத்திடம் கோரியிருந்தது.

இந்தநிலையில் இன்று காலை அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த வாரம் நடைபெறும் ஐபிஎல் நிர்வாக சபைக் கூட்டத்தில் அட்டவணை மற்றும் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படுவது குறித்த கூடுதல் விபரங்கள் விவாதிக்கப்படும்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்ட ஐ.பி.எல். கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

‘கொரோனா’வால் போலிவியாவில் 2ஆவது முறையும் ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக போலிவியாவில் நடைபெற இருந்த ஜனாதிபதி தேர்தல் 2ஆவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எவோ மாரல்ஸ் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி எவோ மாரல்சுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.

போராட்டத்தில் பொதுமக்களுடன் ராணுவமும் கலந்துகொண்டதால் மாரல்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பொலிவியாவில் இருந்து வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த பெண் எம்.பி. ஜூனைன் அனெஸ் தன்னைத்தானே இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார்.

அந்த நாட்டு நாடாளுமன்றத்தில், ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்தி முடிக்க மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மசோதாவுக்கு ஜூனைன் அனெஸ் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து இது தொடர்பாக வழக்கு ஒன்றை அந்நாட்டு தேர்தல் கோர்ட்டில் தொடரப்பட்டது. அதில் செப்டம்பர் 6ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் போலிவியாவில் தற்போது கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 64 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, ஜனாதிபதி தேர்தலை மீண்டும் தள்ளிவைக்க பொதுத்தேர்தல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தேர்தல் கோர்ட் செப்டம்பரில் நடைபெறவிருந்த போலிவிய ஜனாதிபதி தேர்தலை அக்டோபர் 18 ஆம் திகதிக்கு மாற்றி உத்தரவிட்டது.

ஒக்டோபர் 18 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் முடிவுகள் சரிவர வெளியாகவில்லை என்றால் நவம்பர் 29 ஆம் தேதி இரண்டாவது கட்டமாக தேர்தல் வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

‘தை பிறந்துவிட்டது – ஆடியும் முடியப்போகிறது – ஆயிரம் ரூபா மட்டும் வரவே இல்லை’

” சிலர் கூறுவது போல தாத்தாவும், அப்பாவும் மலையகம் தொடர்பில் கனவு காணவில்லை. நாம்தான் கண்டோம். கண்ட கனவுகளை நிறைவேற்றியும் உள்ளோம்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கினிகத்தேனை கெனில்வத்தை தோட்டத்தில் இன்று (24.07.2020) மாலை இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மலையகம் தொடர்பில் நாமே கனவு கண்டோம். அந்த கனவுகளை நிறைவேற்றியுள்ளோம். எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளோம். ஆனால் தாத்தா கண்ட கனவு, அப்பா கண்ட கனவு என்று சிலர் மக்களை ஏமாற்றிவருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலின்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றார். தற்போது நோர்வூட்டுக்கு வந்துசென்றுள்ளார். ஆனால், இன்னும் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள், ஏப்ரல் என்றார்கள், தற்போது ஆகஸ்ட் மாதமும் வரப்போகின்றது. ஆயிரம் ரூபா மட்டும் வரவேயில்லை. எனவே, பொய்யுரைப்பவர்களை பாராளுமன்றம் அனுப்பினால் அவர்கள் மீண்டும், மீண்டும் பொய்யுரைக்கவே முற்படுவார்கள்.

எனவே, மக்களுக்கு சேவைகளை செய்துள்ள நாம் அவற்றை சுட்டிக்காட்டி உரிமையுடனேயே வாக்கு கேட்கின்றோம். பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் எமது சேவைகள் தொடரும். தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் வெற்றிபெறுவார்கள். சலுகைகளுக்காக பேரம் பேசமாட்டோம். மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கவே பேரம் பேசுவோம்.” – என்றார்.

க.கிசாந்தன்

2020 O/L பரீட்சை – விண்ணப்பதாரிகளுக்கான விசேட அறிவித்தல்!

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 22 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

இதன்படி பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளிடம் 2020-07-22 முதல் 2020-08-31 திகதி வரையில்  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இம்முறை அனைத்து விண்ணப்பதாரிகளும் இணைய வழி ஊடாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

 பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk பிரவேசித்து குறித்த அறிவுறுத்தல்களை நன்கு ஆராய்ந்து இணையவழி ஊடாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

‘1000 கதைகூறி ஏமாற்றும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம்’ – சஜித்

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாட்டு மக்களை ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரட்டியடித்து, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சியை மலரசெய்வதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிவரும் வேலுகுமாரின் வெற்றியையும் மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சஜித் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதத்தில் நாவலப்பிட்டியவில் இன்று 24.07.2020 நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சஜித் மேலும் கூறியதாவது,

” பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உறுதியளித்திருந்தது. அந்த தொகை கிடைத்துவிட்டதா? இல்லை. இவ்வாறுதான் இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது. எமது ஆட்சியின்கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அந்த உறுதிமொழியை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

அதேபோல் மக்களுக்கு 20 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான பொருளாதாரத்திட்டமும் எம்மிடம் உள்ளது. ஆட்சிக்கு வந்து 24 மணிநேரத்துக்குள் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும். உலக சந்தையின் எரிபொருட்களின் விலைகள் குறைந்தும், இந்த அரசாங்கம் அதன் நன்மையை நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை.

சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவிலும் கைவைத்துள்ள இந்த அரசாங்கம், மின்கட்டணம் தொடர்பிலும் போலியான அறிவிப்புகளை விடுத்துவருகின்றது. மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் கட்டணம் இல்லாது செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால், அறவிடப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு எமது ஆட்சியின்கீழ் அந்த கொடுப்பனவு மீள வழங்கப்படும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

நாட்டு மக்களை பலவழிகளிலும் ஏமாற்றிவரும் இந்த அரசாங்கம் அடுத்துவரும் நாட்களில் அரச ஊழியர்களின் சம்பளத்தைக்கூட குறைக்கலாம். மேலும் சிலரை வீட்டுக்கு அனுப்பலாம். இவை தடுக்கப்படவேண்டும். அப்படியானால் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சிமலரவேண்டும்.

தொலைபேசி வெற்றிபெறும். கண்டி மாவட்டத்திலும் வெற்றி உறுதி. நான் பிரதமராவேன். அதன்பின்னர் அப்பகுதிகளுக்கு வருவேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

செந்தில் தொண்டமானுக்கு பெருகிவரும் பேராதரவு – சுயேட்சைக்குழு வேட்பாளர்களும் சங்கமம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஆப்பிள் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த வேட்பாளர்கள், செந்தில் தொண்டமானைச் சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

செந்தில் தொண்டமானை, பண்டாரவளையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த வேட்பாளர்கள், செந்தில் தொண்டமானின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது கரங்களைப் பலப்படுத்துவதற்காக உழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவரது வெற்றி மூலமாக எமது சமூகத்துக்கு ஊவா மாகாணத்தில் பாதுகாப்பும் அபிவிருத்தியும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து ஆப்பிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கருத்து வெளியிடுகையில்,

“பதுளை மாவட்டத்தில் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காகவே பல்வேறு சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோரின் தரகர்களாகவே சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்  போட்டியிடுகின்றனர்.

நான்கு இலட்சம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோருக்கு 2 சுயேட்சைக் குழுக்களும் ஒரு இலட்சம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தோருக்கு 10 சுயேட்சைக் குழுக்களும் பதுளையில் போட்டியிடுகின்றன. சுமார் 14 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டால் பாராளுமன்றம் செல்லலாம் என எமக்குச் சொல்லப்பட்டது.

அதில் நாம் ஆயிரத்து 500 வாக்குகளைப் பெற்றால் போதும் என்றார்கள். அதனால் நாங்கள் சூட்சுமமாக ஏமாற்றப்பட்டோம். தேர்தல்கள் ஆணைக்குழுவால் பதுளை மாவட்டத்தில் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். அவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐந்து இலட்சம் வாக்காளர்கள் கொண்ட பதுளை மாவட்டத்தில் ஓர் உறுப்பினர் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறவேண்டியுள்ளது.

இவர்கள் சொல்வது போன்று 14 ஆயிரம் அல்லது 15 ஆயிரம் வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் இந்த மாவட்டத்தில் 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள்.

கடந்த கலங்களில் பராளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணி 25 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. பாராளுமன்றத்துக்கு ஓர் உறுப்பினரை அவர்களால் தெரிவு செய்ய முடியாமல் போனது.

அவ்வாறான சூழ்நிலையில் சிறுபான்மை இனத்தவர்கள் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகக் கூடாது என்பதற்காக பெரும்பான்மை இனத்தவர்கள் எங்களை கருவிகளாகப் பயன்படுத்தினர். இன்று சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என நாம் சிந்தித்தோம். ரணில் கட்சியிலோ சஜித் கட்சியில் இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் போது எந்தவிதமான பிரயோசனமும் எமக்கு இல்லை.

ஏனென்றால், கடந்த தேர்தலில் அவர்கள் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்றார்கள். அதில் 15 இலட்சம் வாக்குகள் வடக்கு கிழக்கு மக்களால் அளிக்கப்பட்டவை. மிகுதி உள்ள 40 இலட்சம் வாக்குகளை தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் பிரித்துக்கொண்டுள்ளார்கள். ஆதலால் தலைகீழாக இருந்தாலும் அவர்களால் ஆட்சியமைக்க முடியாது. உடைந்த பஸ்ஸில் டிக்கட் எடுத்து பயணிப்பதை விட ஒழுங்கான, பாதுகாப்பான பஸ்ஸில் பயணிப்பது மேலானது.

அதனாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்சவின் பஸ்ஸில் பயணிக்கத் தயாரானோம். செந்தில் தொண்டமான் சக்தி வாய்ந்த அரசாங்கத்தில் முக்கிய பதவியை வகிப்பார். அனைவருக்கும் சேவையாற்றுவார். அவரிடம், இன, மத, குல வேறுபாடுகள் கிடையாது. ஊவா முழுவதும் செந்தில் தொண்டமானுக்கான ஆதரவு பெருகிவருகின்றது. பதுளை மாவட்டத்தில் அவர் சாதனை படைப்பார். அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம்.” – என்றனர்.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 95 லட்சம் பேர் தப்பினர்’

உலகம்  முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 73 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 56 லட்சத்து 73 ஆயிரத்து 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 95 லட்சத்து 60 ஆயிரத்து 604  பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – 41,69,991
பிரேசில் – 22,89,951
இந்தியா – 12,38,635
ரஷியா – 7,95,038

‘1000 ரூபா மட்டுமல்ல எமது மக்களுக்கு ஆயிரம் பிரச்சினைகளும் உள்ளன’

மலையக மக்கள் என்றால் அவர்களுக்கு சம்பள பிரச்சினை மாத்திரம்தான் இருப்பதாக பலரும் பேசுகின்றார்கள்.ஆனால் அதனையும் தான்டிய பல பிரச்சினைகள் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை சம்பளத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்திவிடாதீர்கள் என மலையக மக்கள் முன்ன்ணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா அமைப்பாளர் தினேஸ் கிரிசாந்த ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நுவரெலியா குயின்ஸ்பெரி விருந்தகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும் பண்டார நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தினேஸ் கிரிசாந்த அசோக ஹேரத் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் மகிந்த சில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய வேலுசாமி இராதாகிருஸ்ணன்,
நுவரெலியா மாவட்டம் என்பது நான்கு தேர்தல் தொகுதியை கொண்ட ஒரு மாவட்டமாகும்.இந்த மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதியிலும் ஜந்துவிதமான காலநிலை நிலவுகின்றது.இவ்வாறான ஒரு மாவட்டம் இலங்கையில் எங்குமே இல்லை என்றுதான் கூற வேண்டும்.
எனவே இந்த மாவட்டத்தை பொருத்த அளவில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.அதற்கு கடந்த காலங்களில் இருந்த சுற்றுலா துறை அமைச்சர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.நாங்கள் பலமுறை இது தொடர்பாக கலந்துரையாடிய பொழுதும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
எனவே அடுத்து வருகின்ற அரசாங்கத்தின் மூலமாக அதனை நிறைவேற்ற வேண்டும்.அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மிகவிரைவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அதற்கு இந்த மாவட்டத்தில் இருக்கின்ற உள்ளுராட்சி சபைகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பாக அனைவரும் பேசுவது சம்பள பிரச்சினை தொடர்பாக மாத்திரமே.ஆனால் அதனைவிட பல பிரச்சினைகள் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்றது.
குறிப்பாக கல்வி சுகாதாரம் அடிப்படை வசதிகள் என பல பிரச்சினைகள் இருக்கின்றது.இது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த பொழுது கல்வி தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தேன்.எனவே ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 17 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 17 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,O94 ஆக அதிகரித்துள்ளது.

648 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 753 ஆக இருக்கின்றது.

‘நுவரெலியா மாவட்டத்திலுள்ள போலி வைத்தியர்களுக்கு முடிவு கட்டப்படும்’

நுவரெலியா மாவட்டத்திலுள்ள போலி வைத்தியர்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும். அத்துடன், அவர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – என்று நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தலகல தெரிவித்தார்.

” பெருந்தோட்ட பகுதியை அண்டிய நகர் மற்றும் கிராம புறங்களில் இவ்வாறான போலி வைத்தியர்கள் உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. அவர்களை இனம் கண்டு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றும் அவர் கூறினார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...