மேலதிக கொழுந்து பறிப்பு உட்பட சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பை பெறுவதற்கு மேலதிக கொழுந்து பறிக்க வேண்டுமா என நாடாளுமன்ற உறப்பினர் கலைச்செல்வி எழப்பிய கேள்விக்க பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“சம்பள அதிகரிப்பு தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதற்கமைய சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர்களுக்கு மேலதிக சுமையை திணிப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை.
இத்தனை கிலோ பறித்தால்தான் சம்பள அதிகரிப்பு என புதிய எல்லையை நாம் நிர்ணயிக்கவில்லை. வேறு நிபந்தனைகளும் முன்வைக்கப்படவில்லை.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. எனவே, ஏதேனும் நிபந்தனை விதிக்கப்பட்டால் அது பற்றி தெரியப்படுத்தலாம். அமைச்சு உரிய தலையிடகளை மேற்கொள்ளும்.” – என்றார்.
அதேவேளை, நிரந்த தொழிலாளர்களுக்கு 400 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கப்பெறுகின்றது. தற்காலிக தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் 200 ரூபா கிடைக்கப்பெறுகின்றது எனவும் அமைச்சர் கூறினார்.










