இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏற்பாட்டில் நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. இதனைக் கண்டித்தே யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் அதே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச நீதியை வலியுறுத்தும் இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக மற்றும் மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் அணிதிரளுமாறு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை, சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச மாநாடொன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles