இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது அமைச்சர் ராஜ்நாத் சிங் , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்த ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த ஆய்வு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5, 2025 அன்று கொழும்புவிற்கு பயணம் மேற்கொண்டபோது கையெழுத்தான ‘இந்தியா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்’ (MoU) தற்போதைய செயல்பாடுகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆய்வு செய்யப்படும்.
இந்த 5 ஆண்டு கால ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ உறவை முறைப்படுத்தும் முதல் முழுமையான பாதுகாப்புக் சட்டமைப்பாகும். இது இந்தியப் பெருங்கடலில் நிலவும் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
கூட்டுக் ராணுவப் பயிற்சிகளை அதிகரித்தல் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள்.
மனிதநேய உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் இருநாட்டு கடற்படை கப்பல்களின் பரஸ்பர துறைமுக வருகை.
பாதுகாப்பு உற்பத்தி மற்றும் தொழில் துறைகளில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல்.
இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகள் அமலில் இருக்கும். ஏதேனும் ஒரு நாடு 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு கொடுத்து இதை ரத்து செய்ய முடியும் அல்லது பரஸ்பர ஒப்புதலுடன் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
பின்னணி மற்றும் முக்கியத்துவம்
ஏப்ரல் 2025-இல் பிரதமர் மோடி மேற்கொண்ட இலங்கை பயணத்தின் போது கையெழுத்தான 7 முக்கிய இருதரப்பு ஆவணங்களில் இந்த பாதுகாப்பு ஒப்பந்தமும் ஒன்றாகும். அந்தப் பயணத்தின் போது சுகாதாரம், ஊடகம், எரிசக்தி, உள்கட்டமைப்பு இணைப்பு மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகிய துறைகளிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அண்டை நாடுகளுடன் நெருங்கிய ராணுவ உறவைப் பேணவும் இந்தியா முன்னுரிமை அளித்து வரும் நிலையில், அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
