பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தும் வகையிலான பதிவை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் இளைஞரின் மேன்முறையீட்டு செலவை ஏற்க இலங்கை அரசு மறுத்துள்ள நிலையில், அவரை இலங்கைக்கு மீளக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை தலையீடு செய்யுமாறு அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது மகன் சிவராசா அனோஜன் பேஸ்புக்கில் இஸ்லாம் மதம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து பொருத்தமற்ற பதிவை வெளியிட்டதாகக் கூறி சவூதி அரேபியாவில் தண்டனை அனுபவித்து வருவதாக, அம்பாறை மாவட்டம், கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த தந்தை தம்பிராசா சிவராசா மற்றும் தாய் யோகலெச்சுமி சிவராசா ஆகியோர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 15 ஆம் திகதி அல் அஹ்சா குற்றவியல் நீதிமன்றம் (Al Ahsa Criminal Court), அனோஜனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் விதித்தது.
இந்தத் தண்டனையை குறைக்கும் நோக்கில் 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய முடியும். எனினும், அதற்குத் தேவையான சட்டத்தரணி கட்டணமான 20,000 சவூதி ரியாலை ஏற்க இலங்கை அரசு மறுத்துள்ளது.
“எதிர்மனுதாரர் மேன்முறையீடு செய்ய விரும்பினால், சட்டத்தில் குறிப்பிடப்பட்ட கால எல்லைக்குள் மேன்முறையீடு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான சட்டச் செலவுகளை எதிர்மனுதாரரே ஏற்க வேண்டும் என சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் பரிந்துரைத்துள்ளது” என வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பணிப்பாளர் நாயகம், கடந்த ஜூலை 31 ஆம் திகதி அனோஜனின் தந்தைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமது மகனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை குடும்பத்தையே ஆழ்ந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக அனோஜனின் பெற்றோர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
“அனோஜன் எங்கள் குடும்பத்தின் மூத்த மகன். எங்கள் குடும்பம் முழுவதும் அவரது வருமானத்தையே நம்பியிருந்தது. நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் வாழும் குடும்பம். அவருக்குச் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை வழங்குவதற்கு எங்களிடம் போதுமான சொத்துக்கள் இல்லை” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட வேண்டிய விவகாரம் எனக் குறிப்பிட்டுள்ள பெற்றோர், தங்கள் மகனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையைத் தளர்த்தவும், அவரை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்து வரவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உதவ வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
மேலும், அவரை இலங்கைக்கு மீளக் கொண்டுவர தேவையான சட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதுடன், அவசியமெனில் நிதியுதவியும் வழங்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“எங்கள் குடும்பம் தற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான சூழ்நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு, எங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவீர்கள் என நம்புகிறோம்” என பெற்றோர் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.










