‘பெருந்தோட்ட வீடமைப்புக்கான பெறுமதியின் 50  வீதத்தை பயனாளிகளிடமிருந்து அறவிட முடிவு’

பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிக்கு மேலதிகமாக இந்திய அரசாங்கமும் இவர்களுக்கான வீட்டு திட்டத்திற்கு உதவியுள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு 550 சதுர அடியை கொண்ட வீட்டுடன் இரண்டு வீடமைப்பு திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வீடொன்றை அமைப்பதற்காக 7 பேர்ச் காணி, மேலதிகமாக 3 பேர்ச் காணி அதாவது கால்நடை வளர்ப்புக்கான தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் வருமாறு,

ஓட்டுமொத்த தோட்டத்தொழிலாளர் சமூகத்தை இலக்காகக் கொண்டு மிகவும் பாதுகாப்பான வாழ்விடத்தை உரித்தாக்குவதற்காக தோட்ட வீடமைப்பு முறைமையை திருத்தம் செய்தல்

தோட்ட தொழிலாளர்களுக்கு லயின் அறைகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தோட்ட வீடமைப்பு முறைமை 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை பல்வேறு பொறிமுறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கத்தின் அனுசரணையுடன் 7 பேர்ச்சர்ஸ் காணி உறுதியுடன் கூடிய 550 சதுர அடிகளைக் கொண்ட வீடமைப்பு மற்றும் இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களுடன் 550 சதுர அடிகளைக் கொண்ட 02 வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இம்முன்மொழிவுத் திட்ட முறைமையின் கீழ் வீடுகளை வழங்கும் போது பின்பற்றுகின்ற நடைமுறைகள் மாறுபடுகின்றமையால் ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளதால், தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் போது பொதுவான ஒரு பொறிமுறையைப் பின்பற்றுவதற்கும், அதற்கமைய கீழ்க்காணும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக   பிரதமர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• தற்போதுள்ள லயின் அறைகளை அகற்றி குறித்த இடத்திலேயே புதிய வீடுகளை அமைத்தல்

• வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் ஆபத்துக்கள் இருப்பின், மற்றும் லயின் அறைகள் அமைந்திருக்கும் இடங்களில் இடவசதிகள் போதுமானளவு இல்லாவிட்டால் வேறு இடங்களில் வீடமைப்பை நிர்மாணித்தல்

• பிற்காலத்தில் குறித்த வீடுகளை இருமாடி வீடுகளாக நிர்மாணிக்கக் கூடிய வகையில் 550 சதுர அடிகளைக் கொண்ட வீட்டின் முதலாம் கட்டத்திற்காக 1.3 மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணித்தல்

• கால்நடை வளர்ப்பு மற்றும் வீட்டுத் தோட்டத்திற்காக மேலதிகமாக 03 பேர்ச்சர்ஸ் காணியை ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் ஒதுக்கி வழங்கல்

• வீடமைப்பிற்கான பெறுமதியின் 50  வீதத்தை பயனாளிகளிடமிருந்து மீள அறவிடுவதற்கும், அதற்காக 20 வருடகாலம் வழங்குதலும்

• லயின் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வரைக்கும் வேறு இடத்தில் தற்காலிகமாக வசிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல்

Related Articles

Latest Articles