Home Blog Page 3943

ஆட்டோ ஓட்டுநருக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை – சினிமாப் பாணியில் மஸ்கெலியாவில் சம்பவம்

ஆட்டோ சாரதிக்கு மயக்கமருந்து கொடுத்து, பணம் மற்றும் அவர் அணிந்திருந்த ஆபரணங்களை கொள்ளையர்கள், கொள்ளையிட்டுச்சென்ற சம்பவமொன்று நேற்று (21) மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மஸ்கெலியா நகரில் 2ஆவது ஆட்டோ நிறுத்துமிடத்திலிருந்து, நோட்டன் பகுதியில் உள்ள  லக்சபானவிற்கு செல்ல வேண்டும் எனக் கூறி 3 இளைஞர்கள், ஆட்டோவொன்றை வாடகைக்கு அமர்த்தி பயணித்துள்ளார்.

இவ்வாறு செல்லும் வழியில் ஆட்டோ ஓட்டுனருக்கு குளிர்பானம் ஒன்றை வழங்கி குடிக்குமாறு கூறியதுடன், தாங்களுடன் அருந்தியுள்ளனர்.

ஆட்டோ நோட்டன் பகுதியை அண்மித்தவேளையில் அதன் ஓட்டுனர் மயக்கமடைந்து, ஆட்டோ வடிகாலில் சென்று நின்றதும் அதில் பயணித்த இளைஞர்கள் ஆட்டோ சாரதியின் பணம்,நகை என்பவற்றை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

ஆட்டோ சரிந்துகிடப்பதை கண்ட மக்கள்,  மயக்கமுற்றிருந்த சாரதியை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். நோட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 91 லட்சம் பேர் தப்பினர்

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்து 98 ஆயிரத்து 721 ஆக அதிகரித்து உள்ளது.

இவர்களில் 91 லட்சத்து  16  ஆயிரத்து 242 பேர் குணமடைந்துள்ளனர். 53 லட்சத்து 62 ஆயிரத்து 886 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 63 ஆயிரத்து 646  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 6 லட்சத்து 19 ஆயிரத்து 593  பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

தொண்டமானின் வீட்டுத்திட்ட கனவை நிறைவேற்றுவோம் – பிரதமர் மஹிந்த

” உங்களின் பெறுமதியான வாக்குகளை வீணடிக்காமல் நாட்டை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்துங்கள்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று (2020.07.21) மாலை கண்டி பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சி பேதத்தை மறந்து இந்த சந்தர்ப்பத்தில் தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் பயன்படுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் உட்பட அனைத்து மக்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் அதிகாரத்திற்கு வரும் பொதுஜன பெரமுன அரசாங்கம் மூலம் மக்களின் வீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் போது ஏற்பட்ட வீட்டுத் திட்ட முறைகள் தோல்வியடைந்தமை தொடர்பில் பிரதமர் நினைவு கூர்ந்தார். புதிய வீட்டுத் திட்ட முறை தயாரிக்கும் போது வாழ்வதற்கு தகுந்த சூழலுடனான வீட்டுத் திட்ட முறை ஒன்றை தயாரிக்க வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவுடன், உடனடியாக அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் ஒரு வீடு என்ற கணக்கில் 14500 வீடுகளுக்கும் அதிக வீடுகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில் கடந்த அரசாங்க காலப்பகுதியை போன்று போஸ்டர் மூலம் அநாவசிய செலவு செய்து பிரச்சார நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவில்லை.

தோட்ட மக்கள் வாழக் கூடிய தகுந்த வீடுகளை வழங்குவது, மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரதான எதிர்பார்ப்பாக இருந்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தொண்டமான் தற்போது உயிரோடு இல்லை என்ற போதிலும் மக்களின் வீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எங்கள் அரசாங்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

மனிதகுலத்தின் அழிவு தவிர்க்க முடியாதது

இந்த புவியின் மானுட வரலாறு ஒரு புதிய விடியலை எதிர்நோக்கி இருக்கிறது.

மனிதர்கள் எப்போதும் தங்களுக்கு ஏற்றவாறு இந்த புவியை தகவமைத்து இருக்கிறார்கள். அது நெருப்பின் கண்டுபிடிப்பாகட்டும் அல்லது விவசாயம் ஆகட்டும். ஆனால், ஹோமோ சேபியன்ஸின் தாக்கம் இப்போது ஒரு முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

வளிமண்டலத்தில் நிறைந்துள்ள காற்று மாசாகட்டும் அல்லது பெருங்கடலில் குவிந்துள்ள குப்பைகள் ஆகட்டும் எங்கும் எதிலும் மனித இனத்தின் தடயங்கள் பதிந்திருக்கிறது. ஆனால், இப்போது இந்த திசையில் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளன.

இந்த பூமியிலிருந்த 99 சதவீத உயிரினங்கள் பேரழிவுகளில் அழிந்துவிட்டன. இந்த பூமியில் பெரும் விலங்காகக் கருதப்பட்ட டைனோசர் இப்போது இல்லை.

எல்லா பேரழிவுகளிலிருந்தும் இதுவரை தப்பிவந்த மனிதக்குலத்தின் எதிர்காலம் அவ்வளவு ஒளிமயமானதாக இல்லை. ஆம், காலப்போக்கில் மனித இனமும் இல்லாமல் போகலாம்.

மனிதகுலத்தின் அழிவு தவிர்க்க முடியாதது

மனிதகுலம் அழியும் என்பதில் வல்லுநர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எப்போது என்பதுதான் கேள்வி. ஆனால், பலர் அந்த அழிவு மிக அருகில் இருப்பதாகவே கருதுகிறார்கள்.

அடுத்த நூற்றாண்டுக்கு முன்பே இந்த அழிவு நிகழலாம் என கூறுகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல வைராலஜிஸ்ட் ஃப்ரான்க் ஃபென்னர். மக்கள் தொகை பெருக்கம், சூழலியல் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கும் என்பது அவர் வாதம்.

புவி அழியாது. மனித இனம் அழியும் மனித இனம் இல்லாமலே இந்த புவி ஜீவிக்கும்.

நம் இருப்பின் சாட்சியாக நாம் இந்த புவியில் விட்டுச் சென்ற தடயங்கள் அனைத்தும், நாம் கணிக்கும் காலத்திற்கு முன்பே இல்லாமல் போகும். நம் நகரங்கள் அழியும், பாலங்கள் சரியும்.

இறுதியில் இயற்கையானது நாம் உருவாக்கிய அனைத்தையும் இல்லாமல் செய்துவிடும் என மனிதர்கள் அற்ற உலகம் என்ற புத்தகத்தில் அலன் வைஸ்மேன் குறிப்பிடுகிறார். 2007ஆம் ஆண்டு வெளியான இந்த புத்தகம், மனிதர்களற்ற இந்த புவி எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறது.

நெகிழி துகள்கள், கதிரியக்கம் மற்றும் பிராய்லர் கோழியின் எலும்புகள் இவைதான் மனித இனம் விட்டு செல்லப் போகும் புதைபடிவ தடயங்கள். கோழியின் எலும்பு இந்த பட்டியலில் எப்படி வந்தது என பார்க்கிறீர்களா? ஆண்டுக்கு குறைந்தது 60 பில்லியன் கோழிகளை இந்த புவியில் கொல்லப்படுகின்றன. அப்போது நிச்சயம் அதன் தடயங்கள் இருக்கத்தானே செய்யும்.

நாம் இந்த புவியில் சில இடங்களுக்குச் செல்லாமல் இருக்கிறோம் அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இருக்கிறோம். அங்கெல்லாம் என்ன இருக்கிறது என பார்ப்போம்.

இயற்கை திரும்ப எடுத்துக் கொள்ளும்

செர்னோபில் அணு உலை விபத்து உங்களுக்கு நினைவிருக்கும். உக்ரைனில் 1986ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தின் காரணமாக, அந்த அணு உலையைச் சுற்றி உள்ள 30 கி.மீ பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக இருக்கிறது.

மனிதர்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ள அந்த பகுதியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குச் செடி கொடிகளும், விலங்குகளும் பெருகி வருகின்றன.

இயற்கை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மன்ற நிதி உதவியில், 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வு ஒன்று, அந்த அணு உலை இருந்த பகுதியில் இப்போது ஏராளமான வனவிலங்குகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியது. அதாவது அணு கதிர் வீச்சைவிட உள்ளூர் தாவரம் மற்றும் விலங்கினத்துக்கு மனித இனமே மிகப்பெரிய ஆபத்தாக இருக்கிறது என விவரித்தது.

இயற்கை ஒரு நிலப்பரப்பை மீட்பதற்கு முக்கிய காரணியாக அந்த பகுதியின் தட்பவெப்பமும் இருக்கிறது.

உதாரணத்துக்கு மத்திய கிழக்கில் உள்ள பாலைவனங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய இடிபாடுகளின் எச்சங்களைக் காண முடிகிறது. ஆனால், வெப்ப மண்டல காடுகள் உள்ள பகுதியில் நூற்றாண்டுக்கு முந்தைய இடிபாடுகளின் எச்சங்களைக் கூட காண முடியாது.

ஐரோப்பியர்கள் 1542ஆம் ஆண்டு பிரேசில் மழைக் காடுகளைப் பார்த்த போது, அங்கு ஓடிய நதிக்கரையில் நகரங்களை அமைத்தனர். ஆனால், ஒரு நோயால் அந்த மக்கள் தொகை முற்றும் முழுவதுமாக அழிந்த போது, அந்த நகரங்களை மீண்டு காடுகள் எடுத்துக் கொண்டன. அதாவது அந்த நகரங்கள் காடாக மாறியது.

யார் துயரடைவார்?

மனித இனம் அழியும் போது, மனித இனத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்த விலங்கினமும், செடி கொடிகளும்தான் அதிக துயர் அடையும்.

உரத்தையும், பூச்சி கொல்லிகளையும் அதிகம் சார்ந்து இருந்த பயிர் வகைகளின் இடத்தை அந்த பயிர் வகைகளின் காட்டுச் செடி வகைகள் பிடிக்கும்.

கேரட் வகை அதன் முந்தைய வடிவத்துக்கு மாறும், அது போல சோளமும்தான் என்கிறார் அலன் வைஸ்மேன்.

உதாரணத்துக்குத் தமிழ்நாட்டுப் பின்னணியில் சொல்ல வேண்டுமானால்,இப்போது நம் தேவைக்காக மாற்றியமைக்கப்பட்ட பல் நெல் வகைகள், அதன் முந்தைய வடிவத்துக்கு மாறும்.

பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்ட உடன், பூச்சிகள் பல்கி பெருகும்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த மனிதன் அனைத்து வகைகளிலும் முயலும் போதே, அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அவை பெரியளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுவிட்டால் என் நேரும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பூச்சிகள் பெருக பெருக அதனை உண்டு வாழும் பிற உயிரினங்களும் பெருகும். அதாவது பறவைகள், கொறித்துண்ணிகள்ம் ஊர்வன என அனைத்தும் பல்கிப் பெருகும். உணவு சங்கிலியில் உள்ள அனைத்து கண்ணிகளும் பெருகும்.

ஆனால், எவை உச்சம் தொட்டாலும், அவை கீழே இறங்கியே ஆக வேண்டும். இப்படி பல்கிப் பெருகிய உயிரினங்கள் அதிக காலம் இருக்காது.அந்த உணவு சங்கிலியில் மனித இனம் இல்லாத காரணத்தினால், அது ஏற்படுத்தும் தாக்கமும் அழுத்தமானதாக இருக்கும்.

ஆம். மனித இனத்தின் அழிவு குறைந்தது 100 ஆண்டுகளுக்கு, ஒரு புதிய இயல்பு உருவாகும் வரை, உணவு சங்கிலியில் தாக்கம் செலுத்தும்.

மனித இனம் அழிந்த பின்னரும் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட சில விலங்குகள் உயிர்பிழைத்து வாழ அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் வைஸ்மேன். ஆடு, மாடுகள் மெல்ல இல்லாமல் போகலாம். ஆனால், பூனை தப்பிப்பதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.

நாயைவிடப் பூனை அனைத்து சூழலுக்கும் ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்கிறது என்கிறார்.

பல்கி பெருகும் வன விலங்குகளால் ஆடு, மாடுகள் கொல்லப்படலாம் என்கிறார் வைஸ்மேன்.

மனித இனம் அழிந்த பிறகு புத்திசாலித்தனம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது?

பதில் கூறுவதற்குக் கடினமான கேள்விதான். புத்திசாலித்தனம் தொடர்பாக மூன்று கோட்பாடுகள் உள்ளன. சூழலியல் சார்ந்த தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளப் புத்திசாலித்தனம் தேவைப்பட்டது, அதன் காரணமாகப் புத்திசாலித்தனம் பரிணமித்தது என்பது ஒரு கோட்பாடு.

மனிதன் குழுக்களாக வாழப் புத்திசாலித்தனம் உதவியது என்பது அடுத்த கோட்பாடு. இறுதியாக, ஆரோக்கியமான ஜீன்தானா என்பதை அளவிடும் கருவியாகப் புத்திசாலித்தனத்தைக் கருதலாம்.

மனித அழிவுக்கு பிறகும் இந்த மூன்று விஷயங்களும் மீண்டும் நிகழலாம்.

மனித இனத்திற்கு அடுத்தபடியாக, மூளை அளவு அதிகம் கொண்டது பாபூன் குரங்கு வகை.

“காடுகளில் வாழும் இனம் அது. ஆனால், காடுகளைக் கடந்தும் அவை வாழப் பழகி இருக்கிறது. நாம் செய்ததை பாபூன் செய்யக்கூடும். ஆனால், அவை நம்மை போல செயல்படாது என்றே தோன்றுகிறது. அது வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கிறது,” என குறிப்பிடுகிறார் வைஸ்மேன்.

மனித இனம் அழிந்த பிறது தனது செளகர்யமான எல்லையை விட்டு பாபூன் அல்லது பிற உயிரினங்கள் வெளியே வரக்கூடும்.

இந்த புவியின் எதிர்காலம்
நாளையே அழிந்தால் கூட, தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இந்த புவி எப்படி இருந்ததோ, அந்த நிலைக்கு திரும்ப பல்லாயிரம் ஆண்டுகள் ஆகலாம்.

முன்னமே கரியமில வெளியேற்ற விஷயத்தில் ஆபத்து கட்டத்தைக் கடந்துவிட்டோம்.

அதுமட்டுமல்லாமல், அணு உலை சார்ந்து நமக்கு வேறொரு பிரச்சனை இருக்கிறது.

கதிர்வீச்சு வெளியேற்றத்திலிருந்து இந்த சூழல் மீளும் என்பதை செர்னோபில் உணர்த்துகிறது. ஆனால், இந்த உலகம் முழுவதிலும் உள்ள 450க்கும் அதிகமான அணு உலைகள் மனிதன் அழிந்த பிறகு இயக்க ஆள் இல்லாமல் வெடித்தால் என்ன ஆகும்? அவை எவ்வளவு கதிர்வீச்சை வெளியேற்றும். அவை பூமியில் என்ன மாதிரியான தாக்கத்தைச் செலுத்தும்?

இவை மட்டுமல்ல, எண்ணெய் கசிவு, ரசாயன கசிவு, வெடி விபத்து என மனிதர்கள் விட்டுச் செல்லப் போகும் பல பிரச்சனைகள் இருக்கின்றன.

இதில் பல சூழலியல் கேடுகள் பல நூற்றாண்டுகளுக்குக் கொழுந்துவிட்டு எரியலாம்.

பென்சில்வேனியா நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து பல பத்தாண்டுகளுக்குப் பற்றி எரிந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

மனித இனத்தின் தடயம்
மனித இனம் விட்டு செல்ல போகும் தடயம் அழியப் பல மில்லியன் ஆண்டுகள் கூட ஆகலாம். நாம் விட்டு செல்லும் நெகிழிக் கழிவுகளை உண்ணும் அளவுக்கு மைக்ரோப்ஸ்கள் பரிணமிக்கப் பல காலம் ஆகும்.

நாம் அழிந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் கான்கிரீட் கழிவுகளின் எச்சங்கள் இருக்கும். ஆனால், நிச்சயம் ஒரு கட்டத்தில் அவை முழுமையாக அழியும்.

நாம் நம் சில செயல்பாடுகளை மின்காந்த அலைகளாக மாற்றி இந்த வளிமண்டலத்தில் கடந்த நூறு ஆண்டுகளாக அனுப்பி வருகிறோம்.

அவை பல ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கும். அந்த மின்காந்த அலைகளின் தாக்கம் தான் இறுதியாக அழியும்.

உடல் எடையை குறைத்து ஸில்மாக மாறிய நடிகை ஹன்சிகா

தனுஷ் நடித்த மாப்பிள்ளை எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

ஆனால் இதற்கு முன்பு ஹிந்தியில் சில படங்களில் நடித்துள்ளார்.

இதன்பின் தமிழ், தெலுங்கு என ஆகிய இரு மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

ஆனால் சில வருடங்கள் முன்பு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

மேலும் தற்போது சிம்புவடன் மஹா, பார்ட்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் இவருக்கு முன்பு இருந்தது போல் தமிழ் திரையுலகில் வரவேற்பு மக்கள் மத்தியில் இல்லை என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் சமீப காலமாக ஒர்க் அவுட் செய்து தான் உடல் எடையை குறைத்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை ஹன்சிகா மிகவும் ஸ்லிமாக எழும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

2 தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற இளம் பெண்!

ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கொன்ற இரண்டு தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளிய பதின் வயது பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்படுகிறார்.

தமது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு, தமது குடும்பத்தின் ஏகே 47 துப்பாக்கியை கையில் ஏந்திய இந்தப் பெண், இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். இவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் காயமடைந்ததாக கோர் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணின் தந்தை அரசாங்க ஆதரவாளர் என்பதால், தீவிரவாதிகள் அவர்கள் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி ஏந்தியபடி இருக்கும் அந்தப் பெண்ணின் புகைப்படம் மிகவும் வைரலானது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு க்ரிவா கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டைத் தாக்க மேலும் அதிக தீவிரவாதிகள் வந்துள்ளனர். ஆனால், அக்கிராம மக்களும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும் அவர்களை அடித்து விரட்டியதாகத் தெரிகிறது.

தாலிபன்களை சுட்ட அந்தப் பெண்ணுக்கு 14ல் இருந்து 16 வயதுக்குள் இருக்கும் என்று கூறிய அதிகாரிகள், அவரும், அவரது தம்பியும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

மறந்துவிட்டு பயணிக்காதீர்கள்!

சிரேஸ்ட ஊடகவியலாளர் வரதன் கிருஸ்ணாவின் முகநூலில் இருந்து…

83 இனக்கலவரம் நாட்டின் பல பகுதிகளில் நடந்து தமிழரின் இருப்புக்கள் இல்லாமல் செய்யப்பட்டது, இந்த கலவரம் நடக்கும்போது நுவரெலியா மாவட்டம் மட்டும் அமைதி பூங்காவாக இருந்தது கலவரம் நடந்து இரண்டாம் நாள் அப்போது பிரபல அமைச்சராக இருந்த காமினி திஸாநாயக்க நுவரெலியா வருகிறார் .

அவர் வந்தவுடன் தனது சகாக்களிடம் கேட்டது நுவரெலியாவை மட்டும் ஏன் விட்டுவைத்து இருக்கின்றீர்கள்” அன்று இரவே நுவரெலியாவில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்படுகின்றன, கந்தப்பொலையில் தமிழருக்கு சொந்தமான பிரபலமான கந்தப்போல ஏஜென்சியின்” வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்படுகின்றன அந்த நிறுவனமும் சூறையாடப்படுகின்றது,

இது ஜெஆரின் மேல் தனக்கு இருந்த விசுவாசத்துக்கு காமினி திஸாநாயக்கவால் செய்யப்பட்ட பிரதியுபகாரம்” இந்த இனவாதியின் மகனான நவீன் திஸாநாயக்கவிடம் மலையக தோட்டப்புற வீடமைப்பு காணி உறுதிகளை வழங்குமாறு கேட்பது எவ்வளவு முட்டாள்தனம்?

பிரதமருக்கு குடைப்பிடிக்கும் நீங்கள் அவரிடம் இந்த கோரிக்கையை முன் வைப்பதுதானே நியாயம்? காமினியின் தாத்தாவுக்கு இந்த பெருந்தோட்டங்கள் சொந்தம்? தலையை விட்டுவிட்டு வாலுடன் எதற்கப்பா விவாதம்?

குறிப்பு.

கொத்மலை நீர்த்தேக்கத்தில் பல ஆயிரக்கணக்கான மலையக தமிழரின் வாழ்விடம் இல்லாமற் போனது அவர்களுக்கு எந்தவித நிவாரணங்களையும் வழங்காத காமினி, கொத்மலை பகுதியில் வாழ்ந்த சிங்கள மக்களுக்கு நட்ட ஈட்டு தொகையுடன் புதிய வீடுகள் காணி உரிமைப்பத்திரங்களுடன் வழங்கினார் அவற்றில் ஒரு கிராமம்தான் புஸ்ஸல்லாவையின் மிகப்பெரிய தேயிலைத்தோட்டமான ரோத்சைல்ட் தோட்டத்தை சுவீகரித்து அதை நவகோடாதர ” என்று மிகப்பெரிய சிங்கள கிராமமாக உருவாக்கினார்.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட கிணறு – குடிநீரின்றி தவிக்கும் 300 குடும்பங்கள்!

பலாங்கொடை விகிலிய அல்தொரவத்த பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் குடிநீர் பிரச்சினையால் பெரும் இன்னல்களை அனுபவித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.

சுமார் 300ற்கும் அதிகமான குடும்பங்கள் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தோட்டப் பகுதியில் நிர்மாணித்து இருந்த கிணற்றின் மூலம் மக்கள் குடிநீரை பெற்று வந்த போதிலும் குடும்பங்கள் அதிகரித்துள்ளதால் அந்த கிணற்று நீர் போதுமானதாக இல்லை என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர்.

கிணற்றில் உள்ள நீர் குடிப்பதற்கு போதுமானதாக இல்லாமையினால் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று நீரைப் பெற்று வர வேண்டிய கஷ்டமான நிலைமை உருவாகி உள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்டப் பகுதியில் வசிக்கும் கே பழனியாண்டி(55) என்ற தொழிலாளி கருத்து தெரிவிக்கையில் ஆரம்ப காலத்தில் இந்த தோட்டத்தில் அதிகமான குடும்பங்கள் இருக்கவில்லை. எனினும் தற்பொழுது குடும்பங்கள் அதிகரித்துள்ளன. எனவே இந்த கிணற்றின் நீர் போதுமானதாக இல்லை. கிணற்றிலிருந்து மூன்று குடம் நீரை பெற்றவுடன் கிணற்று நீர் வற்றி விடுகின்றது.

கூலி வேலை செய்யும் நாம் குடிநீரைப் பெற சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி எமக்கு குடிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினார்.

இது சம்பந்தமாக பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் சுனில் பேமசிரியிடம் வினவிய போது பலாங்கொடை பிரதேச சபை எல்லைப் பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ள கிராமப் பகுதிகளை எதிர்வரும் காலங்களில் இனம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பலாங்கொட நிருபர்

விவசாயிகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் – நுவரெலியாவில் ஜனாதிபதி உறுதி!

மரக்கறி செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பாதுகாப்பானதொரு எதிர்காலம் உருவாகும் வகையில் தமது அறுவடைகளுக்குரிய விலையை பெற்றுக்கொள்ளக்கூடிய முறைமையொன்றை தயாரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மரக்கறிகள், பழவகைகள் மற்றும் ஏனைய பயிர்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பது விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொதுஜன முன்னணியில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று (21) நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு, வலப்பனை நகரில் சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனைத் தெரிவித்தார்.

அரச வங்கிக் கடன்கள் தங்களுக்கு நிவாரணத்தை பெற்றுத்தரும் வகையில் இல்லையென விவசாயிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். நுவரெலியா மாவட்டத்தின் அரச நிறுவனங்களில் பல்வேறு வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அவற்றுக்கு நியமனங்களை பெற்று வருவோர் குறுகிய காலத்தில் இடமாற்றம் பெற்று வேறு மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர். அதன் காரணமாக பிரதேச மக்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

பொரமடுல்ல மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்து, அதனை பாடசாலையுடன் இணைத்து பாலம் ஒன்றிணை நிர்மாணித்து தருமாறு மாணவர்கள் முன்வைத்த கோரிக்கையினை ஜனாதிபதி, இராணுவத் தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

நாளைய தினமே அது பற்றி ஆராய்ந்து விரைவாக அக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். பிரதேச மக்கள் முன்வைத்த பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ரிக்கில்லகஸ்கட பிரதேச சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதிக்கு மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.

வலப்பனை வைத்தியசாலைக்கு பிக்குகளுக்கான வாட்டுத் தொகுதியொன்றை நிர்மாணித்து தருமாறு மகாசங்கத்தினர் முன்வைத்த கோரிக்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அபேட்சகர் எஸ்.சதாசிவம், கந்தப்பளை சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்குபற்றினார். வருகை தந்திருந்த பிரதேசவாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதி அவர்களை உற்சாகமாக வரவேற்றனர். ஜனாதிபதி க்கு ஆசிவேண்டி சமயக் கிரியைகளும் நடைபெற்றன.

தரம் வாய்ந்த விதை கிழங்குகள் பற்றாக்குறைக்கு தீர்வை பெற்றுத் தருமாறு விவசாயிகள் ஜனாதிபதியுடம் கோரிக்கை விடுத்தனர். கந்தப்பளையிலிருந்து நுவரெலியா வரையில் வீதியின் இருபுறமும் ஒன்றுகூடியிருந்த மக்களுடன் ஜனாதிபதி உரையாடினார்.

இயற்கை அழகிற்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் நுவரெலியா மாவட்டத்தில் சுற்றாடலை பாதுகாக்குமாறு நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்களிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். சுயதொழிலாக பெண்கள் சிலர் சேர்ந்து முன்னெடுத்து வரும் “பஜட் பெக்” மரக்கறி மற்றும் பழவகைகள் திட்டம் ஜனாதிபதியினால் பாராட்டப்பட்டது.

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழில் மற்றும் காணி உறுதிகள் இல்லாமையினால் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க மற்றும் எஸ்பி.திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

‘கந்தக்காடு கொத்தனி பரவலும் கட்டுக்குள் வருகிறது’

நாட்டில் நேற்று (21) கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று முன்தினம்வரை 2 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இவர்களில் 2 ஆயிரத்து 48 பேர் குணமடைந்துள்ளனர். 671 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் சமுக பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் வெலிசர கடற்படை முகாம் விவகாரம் கொத்தணி பரவலை ஏற்படுத்தியது. தற்போது வைரஸ் தொற்றுக்கு இலக்கான அனைத்து படையினரும் குணமடைந்துள்ளனர்.

அதன்பின்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் பரவல், மீண்டும் கொத்தணி தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவும் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது என நம்பப்படுகின்றது.

எதுஎப்படியோ தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவேண்டியது நாட்டு மக்களின் பொறுப்பாகும்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலய பழைய மாணவர்களின் கிரிக்கெட் திருவிழா!

0
கொட்டகலை /மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலயத்தின் 1999ஆம் ஆண்டு பழைய மாணவர் தொகுதியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கிடையிலான மாபெரும் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியும், ஒன்று கூடல் நிகழ்வும் கடந்த 2026.04.16 அன்று பாடசாலை...

சுயாதீன விசாரணைக்கு இடமளித்தே அமைச்சர் ராஜினாமா!

0
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்து தமது பதவிகளில் இருந்து...

அனல் பறக்கும் நிலக்கரி கொள்வனவு: வலுசக்தி அமைச்சர் ராஜினாமா!

0
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. நிலக்கரி இறக்குமதி தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும்...