அனுதாப ஓட்டு திரட்டும் முயற்சியில் அனுசா – லோரன்ஸ் குற்றச்சாட்டு
மின் கட்டணம் தொடர்பான விசேட அறிவிப்பு!
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக மின் பாவணையாளர்களுக்கு நிவாரணத்தை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன மேற்படி தகவலை வெளியிட்டார்.
” கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்கான மின் கட்டணத்திற்காக மின்சார பாவனையாளர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணம் தொடர்பான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த குழுவின் சிபாரிசு திறைசேரியின் அதிகாரிகள் மூலம் தொடர்ந்தம் மதிப்பீடு செய்யப்பட்டு மின்சார பாவனையாளர்களுக்கான நிவாரணம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அதன் அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிதி , பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கமைவாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே முதலான மாதங்களில் ஒவ்வொரு மின்சாரக் கட்டணப் பட்டியலின் பெறுமதி பெப்ரவரி மாதத்தின் பெறுமதியிலும் பார்க்க அதிகமாயின் பெப்ரவரி மாதத்திற்கு சமமான தொகை வீதம் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக அறவிடுதல் மற்றும் அந்த மின்சாரக் கட்டண பணக் கொடுப்பனவை பூர்த்தி செய்வதற்காக 02 மாத கால அவகாசத்தை வழங்குதல்.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் ஆகிய 3 மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை தற்பொழுது செலுத்தியுள்ள பாவனையாளர்களுக்கு கட்டணத்திற்கான பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கும் பொழுது அவர்களினால் கூடுதலாக செலுத்தியுள்ள தொகையை மீள செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மின்சார பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்துவதை தாமத்தினால் மின்துண்டிப்பு மேற்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.
‘புதிய அரசில் அமைச்சுப் பதவிகள் பெறும் எண்ணம் இல்லை’
“புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையை இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த 11ஆம் திகதி வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போது, ‘அரசியல் தீர்வு கிடைக்க எவ்வளவு காலம் எடுக்கும் எனச் சொல்ல முடியாது.
அந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் எமது பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வது அத்தியாவசிய தேவை. புதிய ஆட்சியில் அமைச்சரவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தனை அமைச்சுக்கள், என்னவிதமான அதிகாரங்கள் என்பவற்றைப் பேரம் பேச எமக்குப் பலம் இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சுப் பதவி தொடர்பான சுமந்திரனின் இந்தப் பேச்சு அரசியல் மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பேச்சுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகள் கண்டனங்களையும் தெரிவித்திருந்தன.
இவ்வாறானதொரு நிலையில், புதிய அரசில் அமைச்சுப் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளுமா என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கேட்டபோது, “புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையே இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றிப் பேச வேண்டிய அவசியமும் இல்லை” என்று உறுதியாகப் பதிலளித்தார்.
1989 முதல் 2015 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள்!
கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பரப்புரைக் கூட்டங்களை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியிருந்தாலும் அந்த கட்டளையை கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் ஏற்று – செயற்படுவதை காணமுடியவில்லை.
கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டது என முன்னதாக அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்தாலும், இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால், சுகாதார நடைமுறைகளுக்கு முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்கியே தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் தேர்தலுக்கான மொத்த செலவு ஆயிரம் கோடி ரூபாவைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 196 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 682 பேரும், சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 3 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 7 ஆயிரத்து 452 பேர் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் தகதிப்பெற்றுள்ளனர். இதில் எத்தனைபேர் வாக்களிப்பார்கள் என்பதை சரியாக கணித்துகூறமுடியாது. அதேபோல் அளிக்கப்படும் வாக்குகளில் எத்தனை வாக்குகள் நிராகரிக்கப்படும் என்பதையும் ஊகிக்கமுடியாது.
ஆனால், கடந்த காலங்களில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் தொடர்பான விபரத்தை பார்ப்போம்.
இலங்கையர்களுக்கு 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. இதன்படி இலங்கையின் முதலாவது அரசுப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 1931 ஜுன் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை நடைபெற்றுள்ளது.
1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு, அவர் அங்கம் வகிக்கும் கட்சிக்கான நிறத்தின் அடிப்படையிலேயே வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.1947 ஆம் ஆண்டுதான் அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களுக்கும் தேர்தல் சின்னங்கள் வழங்கப்பட்டு, தொகுதிவாரி முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது.
எனினும், 1978 இல் தொகுதிவாரிமுறைமாறியது. விகிதாசார – விருப்புவாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றளவிலும் அந்தமுறையிலேயே தேர்தல் நடைபெற்றுவருகின்றது.
1. தேர்தல் திகதி – 1989 பெப்ரவரி 15
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 59 லட்சத்து 62 ஆயிரத்து 31 ( 63.60%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3 லட்சத்து 65 ஆயிரத்து 563 ( 6.13%)
செல்லுபடியான வாக்குகள் – 55 லட்சத்து 96 ஆயிரத்து 468 ( 93.87%)
2.1994 ஒக்டோபர் 16
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 83 லட்சத்து 44 ஆயிரத்து 95 (76.24%)
நிராகரிக்கப்பட்ட வாக்ககள் – 4 லட்சத்து 389 ( 4.80% )
செல்லுபடியான வாக்குகள் 79 லட்சத்து 43 ஆயிரத்து 706 (95.20%)
3.2000 ஒக்டோபர் 10
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 91 லட்சத்து 28 ஆயிரத்து 823 (75.62%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 481,155 (5.27 %)
செல்லுபடியான வாக்குகள் 86 லட்சத்து 47 ஆயிரத்து 668 ( 94.72% )
5.2001 டிசம்பர் 05
அளிக்கப்பட்ட வாக்குகள் – 94 லட்சத்து 49 ஆயிரத்து 813 ( 76.03% )
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4 லட்சத்து 93 ஆயிரத்து 944 ( 5.22%)
செல்லுப்படியான வாக்குகள் – 89லட்சத்து 55 ஆயிரத்து 869 ( 94.77% )
5. 2004 ஏப்ரல் 02
அளிக்கப்பட்ட வாக்குகள் – 97 லட்சத்து 97 ஆயிரத்து 680
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5 லட்சத்து 34 ஆயிரத்து 948
செல்லுப்படியான வாக்குகள் – 92 லட்சத்து 62 ஆயிரத்து 732
6.2010 ஏப்ரல் 08
அளிக்கப்பட்ட வாக்குகள் 86 லட்சத்து 30 ஆயிரத்து 689 ( 61.26% )
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5லட்சத்து 96 ஆயிரத்து 972 ( 6.92% )
செல்லுபடியான வாக்குகள் – 80 லட்சத்து 33 ஆயிரத்து 717 ( 93.08%)
7.2015 ஒக்டோபர் 17
அளிக்கப்பட்ட வாக்குகள் ஒரு கோடியே 16 லட்சத்து 84 ஆயிரத்து 98 ( 77.66%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5லட்சத்து 17 ஆயிரத்து 123 ( 4.43% )
செல்லுபடியான வாக்குகள் – ஒரு கோடியே 11 லட்சத்து 66 ஆயிரத்து 975 ( 95.57%)
வாக்கு என்பது உங்கள் பலம் – உரிமை. எனவே, அதனை முறையாக அளிக்கவேண்டியதும் உங்கள் பொறுப்பாகும்.
பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற பின்னர், உங்களுக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டில் முதலில் தேர்தலில் போட்டியிடும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்துக்கு முன்னால் புள்ளடி (X) இடவேண்டும்.
அதன்பின்னர் அக்கட்சியில் போட்டியிடும் மூவருக்கு விருப்பு வாக்குகளை வழங்கலாம். வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு மேல் புள்ளடி இடவேண்டும்.
மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்தமுடியாது. நீங்கள் விரும்பும்பட்சத்தில் ஒருவருக்கு மாத்திரம் விருப்பு வாக்கை வழங்கலாம். ( அவ்வாறு வழங்கினால் மூன்று வாக்குகளும் அவருக்கு சென்றடையும் என அர்த்தப்படாது)
கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுக்கு முன்னால் புள்ளடி இடாமல் விருப்பு வாக்கு பயன்படுத்தப்படுமானால் அந்த வாக்கு நிராகரிக்கப்பட்ட வாக்காகவே கருதப்படும். மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்துவதும் பிழையான நடைமுறையாகும். புள்ளடி இடுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் இடவும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த வாக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது.
வாக்களிப்பு நிலையத்துக்கு செல்வதற்கு முன்னர் வாக்காளருக்கான அட்டை, அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ( தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு….) இருக்கின்றனவா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
இம்முறை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே தேர்தல் நடைபெறுகின்றது. எனவே, முகக்கவசம் அணிந்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுங்கள். வாக்களிப்புக்காக ஒரு மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதால் இறுதிநேரம்வரை காத்திருக்காது முடிந்தளவு விரைந்துசென்று வாக்குரிமையை பயன்படுத்தவும்.
(வழமையாக காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையே வாக்களிப்பு இடம்பெறும். இம்முறை மாலை 5 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.)
எழுத்து – ஊடகவியலாளர் ஆர்.சனத்
‘2ஆம் அலை அடிக்க முன் பரிசோதனைகளை அதிகரிக்கவும்’
‘கொரோனா’ வைரஸ் பரவியுள்ளதா என்பதனை கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனைகளை உடன் அதிகரிக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,
” கொரொனா பரிசோதனைகளை அதிகரியுங்கள் என இன்று ஜனாதிபதி கூறுகிறார்.இவரென்ன மூன்று மாத உறக்கத்தில் இருந்து இன்றுதான் விழித்தாரா?
கொரொனா நோயாளிகளுடன் தொடர்பாளர்கள், இந்நாட்டில் 40,000 பேர் இருக்கிறார்கள். அவர்களை கண்டறிய உடன் பரிசோதனைகளை அதிகரியுங்கள் என மூன்று மாதங்களுக்கு முன்னரே சொன்னேன்.
அப்போது மனோ பொய் சொல்கிறார். அவரை கைது செய்யுங்கள் என ஒரு தேரர் உட்பட பலர் கத்தினார்கள்.
என்னை கைது செய்ய வரும் பொலிஸ்காரர்களை மாலை பொதூ வர்வேற்க காத்திருந்தேன். வரவில்லை.
சரி இப்போதாவது, பரிசோதனைகளை அதிகரியுங்கள். உடன் அதை செய்யுங்கள். இரண்டாம் அலை அடிக்க முன் அதை செய்யுங்கள், ஆளவந்தோரே..!” – என்றுள்ளது.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை உறுதி – மொட்டு கட்சி சூளுரை!
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய சில விடயங்கள் உள்ளன. எனவே, அவற்றை இல்லாதொழித்து ஒற்றையாட்சியை அடிப்படையாகக்கொண்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (15) கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது ஆளுங்கட்சி எதற்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கோருகின்றது, அதனை பெறமுடியுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. உதாரணமாக நாம் ‘சேட்’ ஒன்றை வாங்கியிருந்தோம். 19 தடவைகள் கிழிந்த இடங்களை தைத்து பாவித்துவிட்டோம். அவ்வாறு தைத்த இடங்களும் கிழிய ஆரம்பித்தால், புதிய “சேட்டை’ வாங்குவதே சிறந்த தேர்வாக இருக்கும்.
19 தடவைகள் திருத்தப்பட்டுள்ள எமது நாட்டு அரசியலமைப்பில் நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய சில விடயங்களும் உள்ளன. அவற்றை நீக்குவதற்கும், அனைத்து இன மற்றும் மத மக்களை சமமாக வாழ வைக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை ஒற்றையாட்சிக்குள் உருவாக்குவதற்கும் புதிய அரசியலமைப்பு அவசியம். இதற்கு தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்குவார்கள். இதற்கு அஞ்சியே எதிரணிகள் கூச்சலிடுகின்றன.” – என்றார்.
‘சக்திவேலின் சக்தியை காட்டுவேன்’
” அமோக வாக்கு என்ற சொல்லுக்கு அர்த்தம் இ.தொ.கா. அதில் சக்திவேலின் சக்தியை பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டும்.” – என்று காங்கிரஸின் உபத்தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான பழனி சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அக்கரப்பத்தனை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
” எங்கு சென்றாலும் இ.தொ.காவுக்கு இருக்கும் வரவேற்பு பேரானந்தத்தை கொடுக்கின்றது.அலை அலையாக மக்கள் எம்மை வரவேற்கின்றனர்.நிச்சயம் சக்திவேலின் சக்தி என்ன என்பதை பொதுத்தேர்தல் முடிவுகளில் தெரியும்.” – என்றார்.
ஒரு கோடியே 36 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 36 லட்சத்து 92 ஆயிரத்து 610 ஆக அதிகரித்து உள்ளது. அத்துடன், கொரோனாவால் அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,92,910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 80 லட்சத்து 37 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,616 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5 லட்சத்து 86 ஆயிரத்து 839 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,15,991 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்றால் மேலும் 958 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 1,40,101 ஆக உயர்ந்து உள்ளது.
பிரேசிலில் ஒரே நாளில் 39,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 19,70,909 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனா தொற்றால் 1,261 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 75,523 ஆக உயர்ந்து உள்ளது.
தேயிலை விலை வீழ்ச்சி – சிறுதோட்ட உரிமையாளர்கள் கவலை
இரத்தினபுரி மாவட்டத்தில் பச்சை கொழுந்து ஒரு கிலோவின் விலை 105 ஆக இருந்த போதிலும் தற்பொழுது அதன் விலை 90 ரூபாவாக குறைந்து உள்ளது. இதனால் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கில் பல கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கொவிட்-19 (கொரோனா) வைரஸ் நிலைமையின் பின்னர் இம்மாவட்டத்தில் 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பச்சை கொழுந்து ஒரு கிலோ 120-, 105 ரூபாவுக்கிடையில் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களிடமிருந்து சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பெற்று வந்தனர்.
எனினும் ஜூன் மாதம் முதல் கொழுந்தின் விலை ஒரு கிலோவிற்கு 90 ரூபாவுக்கும் 87 ரூபாவுக்கும் இடையில் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் அதிகளவு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் வாழும் இரத்தினபுரி மாவட்டத்தில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் சிறிய தேயிலை தோட்ட சூழலில் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
தேயிலை தொழிற்சாலைகளின் மூலம் கிடைக்கும் பணத்தில் தொழிலாளர்கள் சம்பளம், உர வகைகள் உட்பட உற்பத்திக்குத் தேவையான ஏனைய செலவுகளை சமாளிக்க வேண்டி உள்ளது. தேயிலைக் கொழுந்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் தமக்கு பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
‘கொரோனா’ தலைதூக்கினால் மீண்டும் ஊரடங்கு?
கொரோனா’ வைரஸ் வேகமாக பரவினால் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் பிரகாரம் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. ஓரிரு இடங்களிலேயே பிரச்சினை இருக்கின்றது. நாடு தழுவிய ரீதியில் வைரஸ் தாக்கம் இருந்தால்தான் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பரீசிலிக்ககூடியதாக இருக்கும்.
குறிப்பாக கொரோனா வைரஸ் பரவில் அதிகரித்தால் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு (ஊரடங்கு சட்டம்) செல்லவேண்டியேற்படும். அதற்கான தேவை தற்போது எழவில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலை உருவாகாது என நம்புகின்றோம்.
அதேவேளை, அநுராதபுரம் ராஜாங்கனை பகுதி தற்போது முடக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. மூன்று பிரிவுகளில் வாழும் சுமார் 12 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். எவரும் வெளியில் செல்லமுடியாது. வெளியில் இருந்து எவரும் உள்ளே வரமுடியாது.
ஏனைய பிரதேசங்களிலும் எவராவது அடையாளம் காணப்பட்டால் இதே நடைமுறை தொடரும். இவ்வாறு செய்ததால்தான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கமுடியும்.” -என்றார்.





